டெல்லி: இந்தியாவில் சிகரெட், புகையிலை போன்றவற்றிற்கு மத்திய அரசு கடுமையாக வரியை உயர்த்தியது. வரி உயர்விற்கு முக்கிய காரணம், இந்தியார்களிடத்தில் இருக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்கவே இத்தகைய வரி உயர்வு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் உண்மையில் அப்படி இல்லை என்ற தோன்றுகிறது.
இந்தியாவில் புகழ்பெற்ற சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி நிறுவனத்தில், நம் குடும்பத்தையும், உயிரையும் காக்கும் நிறுவனமான எல்.ஐ.சி அதிகளவில் முதலீடு செய்துள்ளது. உயிர் காக்கும் நிறுவனம் (எல்.ஐ.சி) உயிர் கொல்லும் நிறுவனத்தில் (ஐடிசி) முதலீடு செய்வது சரியா??
முதலீடு தொடர்ந்து உயர்வு
ஜூலை 30ஆம் தேதி முடிவில் எல்.ஐ.சி நிறுவனம் சுமார் 4.39 கோடி மதிப்பிலான பங்குகளை கைபற்றி தனது பங்கு இருப்பை 14.45 சதவீதம் அளவில் உயர்த்தியுள்ளது.
எல்ஐசி மட்டும் விதிவிளக்கல்ல
சிகரெட் தயாரிக்கும் இந்நிறுவனத்தில் எல்ஐசி மட்டும் அல்லாமல் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது. குறிப்பாக SUUTI 11.27%, நியூ இந்தியா இன்சூரன்ஸ் 1.97%, ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பனி 1.8%, ஒரியன்டெல் இன்சூரன்ஸ் 1.55% மற்றும் நேஷ்னல் இன்சூரன்ஸ் நிறுவனம் 1.5% பங்குகளை இருப்பில் வைத்துள்ளது. இதில் மத்திய அரசு மட்டும் சுமார் 32.3 சதவீத பங்குகளில் முதலீடு செய்துள்ளது.
மத்திய அரசு
நாட்டு மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வாதரத்தில் அதிகளவில் நிதிகளை ஒதுக்கியுள்ள மத்திய அரசு, மக்களின் வாழ்வை கெடுக்கும் நிறுவனங்களில் எப்படி முதலீடு செய்கிறது கேள்வி எழும். ஆனால் ஐடிசி நிறுவனம் சிகரெட் மட்டும் அல்லாமல் உணவு பொருட்களில் இருந்து டிஸ்சு போர் வரை தயாரித்து வருகிறது. இத்துறை வளர்ச்சிக்காக மத்திய அரசு அதிகளவில் முதலீடு செய்கிறது.
ஐடிசி நிறுவனத்தின் லாபம்
இந்நிறுவனம் பல பொருட்களை தயாரித்து வந்தாலும் இந்நிறுவனத்தின் அதிகப்படியான லாபம் சிகரெட் விற்பனையில் இருந்துதான் வருகிறது. இதனை கருத்தில் கொண்டுதான் வரி உயர்வு செய்த தருணத்தில் அதிகப்படியான லாபத்தை எதிர்பார்த்து மத்திய அரசு அதிகளவில் முதலீடு செய்துள்ளது. இதற்கு பெயர் தான் ராஜ தந்திரமோ...