திருப்பதி: இந்தியாவில் மற்ற வழிபாட்டுத்தலங்களுக்கு இல்லாத ஒரு முக்கியமான சிக்கல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உண்டு. அது என்னவென்றால் ஆண்டு தோறும் குவியும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளை என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்குவது தான் அந்த சிக்கல்.
வெளிநாட்டு நாணயங்கள்
அண்மையில் ஒரு பெரிய அளவு தங்கத்தை எஸ் பி ஐ வங்கியில் டெபாசிட் செய்த பிறகு, அடுத்தபடியாக வெளிநாட்டுப் பணமாகக் கொடுக்கப்படும் காணிக்கைகளை எவ்வாறு மாற்றுவது என்பதைக் குறித்து ஆலோசித்து வருகின்றனர் ஆலய நிர்வாகிகள். இவை ஏறக்குறைய நாற்பதினாயிரம் கிலோ இருக்கும் என டெக்கான் க்ராநிகுள் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
அந்த செய்தியின் படி, வெளிநாட்டுப்பணம் வழக்கமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக இந்திய ரூபாயில் மாற்றப்பட்டு விட்டாலும், நாணயமாக உள்ள பணத்தை மாற்றுவதில் ஆலய நிர்வாகத்திற்கு சிக்கல் உள்ளது. இதனால் அவர்கள் ரிசர்வ் வங்கியின் உதவியை நாடியுள்ளனர்.
தங்க வைப்பு நிதி
கடந்த வாரத்தில், சுமார் 1,800 கிலோ தங்கத்தை எஸ் பி ஐ வங்கியிடம் கோயில் நிர்வாகம் டெபாசிட்டாக ஒப்படைத்ததும் தற்போது அவ்வங்கியிடம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான 5000 கிலோவிற்கும் அதிகமான தங்கம் வங்கியின் வைப்பு நிதியில் உள்ளள என்பதும் குறிப்பிடத்தக்கது.
வருவாய்
இத்திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் சுமார் ரூ.2,200 கோடி முதல் ரூ.2,400 கோடி வரை நிதி கிடைக்கிறது.