கோயம்புத்தூர்: இந்தியாவில் கடந்த 10 வருடத்தில் அதி வேகமாக வளர்ந்த துறைகளில் சாப்ட்வேர் துறையும் ஒன்று. இதனால் பெரு நகரங்கள் அனைத்தும் பரிணாம வளர்ச்சி கண்டது போல உருமாறியுள்ளது. குறிப்பாக நொய்டா, கூர்கான், சென்னை, கோயம்புத்தூர் ஆகியவை.
தமிழ்நாட்டில் சென்னை ஐடி துறைக்கு மிகவும் முக்கியமான இடம், இதேவேளையில் கோயம்புத்தூர் ஐடி சாப்ட்வேர் ஏற்றுமதியில் தற்போது கலக்கி கொண்டு இருக்கிறது. நடப்பு நிதியாண்டில் இது வரை சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான மென்பொருள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது, இந்த ஆண்டு இறுதிக்குள் சாப்ட்வேர் ஏற்றுமதி இலக்கான ரூ.5,000 கோடி கண்டிப்பாக எட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர்
சிறப்பான உட்கட்டமைப்பு மற்றும் விமான போக்குவரத்து வசதி கொண்ட கோயம்புத்தூர், ஐடி துறையில் வலிமையான வளர்ச்சியை கண்டு வருகிறது. குறிப்பாக கடந்த 2-3 ஆண்டுகளில் கோயம்புத்தூரில் இத்துறை சுமார் 35-40 சதவீதம் வரை வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. மேலும் இத்துறையில் 20,000 பேர் பணியாற்றுகின்றனர் என கோயம்புத்தூர் வட்ட சிஐஐ தலைவர் அசோக் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 7
மேலும் வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி கோயம்புத்தூரின் மிகப்பெரிய ஐடி விழவான "கனக்ட் கோயம்புத்தூர்" விழா நடைபெற உள்ளது இதற்காக கோயம்புத்தூர் முழுவதும் விழா கோலமாக உள்ளது.
சிஐஐ
இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) கோயம்புத்தூர் வட்டம் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. இதுவரை சுமார் 200 பேர் கலந்துகொள்ள விண்ணப்பித்துள்ளனர்.
வர்த்தகம்
கோயம்புத்தூரில் முக்கிய வர்த்தகமாக மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு உள்ளது. அதுபோல மோட்டார் மற்றும் பம்புகள், டெக்ஸ்டைல் மற்றும் கல்வி நிறுவனங்கள் அதிகளவில் இயங்கி வருகிறது. மேலும் இத்துறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அனைத்து வகையான போக்குவரத்து வசதிகளும் கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு உண்டு. இதனால் ஒவ்வொரு வருடத்திலும் இம்மாவட்டத்து வர்த்தகம் சிறப்பாக வளர்ந்து வருகிறது.