டெல்லி: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் கூட்டணியில் இந்தியாவில் விமான சேவை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் இந்நிறுவனத்தின் பெயரை திங்கட்கிழமை இக்கூட்டணி தெரிவித்துள்ளது.
ஏற்கனவே டாடா குழுமம், ஏர்ஏசியா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மலவு விலை விமான போக்குவரத்து சேவையை வழங்கி வரும் நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள இந்நிறுவனத்திற்கு "விஸ்தாரா" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விஸ்தாரா-வுக்கு போட்டி
இந்த புதிய நிறுவனத்திற்கு இத்துறையின் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா மிகப்பெரிய போட்டியாக இருக்கும். மேலும் ஜெட் ஏர்வேஸ் அதேநாளில் ஏதிஹாட் நிறுவனத்துடன் இணைந்துள்ளதால் விஸ்தாரா-வுக்கு போட்டு கடுமையாக இருக்கும்.
டாடா- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
புதிய நிறுவன பெயரை வெளியிடும் நிகழ்ச்சியில் இக்கூட்டணி நிறுனத்தின் தலைமை செயல் அதிகாரியான Phee Teik Yeoh கூறுகையில் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் 5 ஏர்பஸ் விமானங்களை பெற உள்ளதாகவும். அடுத்த கட்டமாக இந்த எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்திய சந்தை
மேலும் அவர் இந்திய சந்தையில், புதிய நிறுவனத்தின் பெயர் காரணத்தை போன்று அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. அதனை கண்டிப்பாக பயன்படுத்தி அதிகப்படியான வாடிக்கையாளர்கள் மற்றும் லாபத்தையும் அடைவோம் என அவர் தெரவித்தார்.
பெயர் காரணம்
"விஸ்தாரா" என்ற பெயர் சமஸ்கிருதம் மொழியில் இருந்து வந்தது. இதற்கு பொருள் எல்லையற்ற விரிவு. மேலும் இந்நிறுவனத்தின் லோகோ எட்டு முனை நட்சத்திரம் ஆகும்.
பங்கீடு
இந்த நிறுவனத்தின் டாடா சன்ஸ் நிறுவனம 51 சதவீதமும், மீதமுள்ளவை சிங்கப்பூர் நிறுவனம் வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் சேவை வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து துவங்குகிறது.