டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கிக்கு துணை கவர்னர் என்ற தகுதியில் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஒருவரை நியமிக்க வேண்டும் என இவ்வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தி வருகிறார். இதுவரை இத்தகைய பதவி ரிசர்வ் வங்கியில் அமைப்பில் கிடையாது, ராஜன் கூறுவது போல் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கி சட்ட அமைப்பில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சகத்தின், நிதி சேவைகள் செயலாளர் ஜி.எஸ். சாந்து இது குறித்து கூறுகையில், ரகுராம் ராஜனின் வேண்டுகோள் நாட்டில் பொருளாதாரம் இருக்கும் நிலையில் முக்கியமான ஒன்று என்றாலும், இதுகுறித்து ஆலோசனை முக்கியமானது.
மேலும் புதிய தலைமை செயல் அதிகாரிக்கான பொறுப்புகளை யாவை என்பதை வகுக்க வேண்டும். இதுமட்டும் அல்லாமல் இந்திய பொருளாதாரத்தில் பல கட்டங்களில் அவருக்கான உரிமைகள் யாவை என்பதையும் கண்டறிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த புதிய பதவிக்காக ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும் இதை தான் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.