மும்பை: கடந்த இரு வாரங்களாக குறைந்து வந்த அன்னிய செலாவணி இருப்பு கடந்த வாரம் ஒரு சிறு உயர்வை எட்டியது. இதனால் ஆகஸ்ட் 18-23ஆம் நாட்களில் அன்னிய நாணய இருப்பு 43.3 மில்லியன் டாலர் அதிகரித்து, 319.39 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
தொடர் குறைவு..
ஆகஸ்ட் 8 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி இருப்புகள் 643.3 மில்லியன் டாலர் குறைந்து 319.347 பில்லியன் டாலராக இருந்தது. அதேபோல் ஆகஸ்ட் 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 573.5 மில்லியன் டாலர் குறைந்து 319.99 பில்லியன் டாலராக இருந்தது. அதற்கும் முந்தய வாரத்தில் வரலாற்றின் உயர் அளவான 321 பில்லியன் டாலரை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாணயச் சொத்துகள்
அன்னிய செலாவணியின் ஒரு பெரும் அங்கமான அன்னிய நாணயச் சொத்துகள் 54.7 மில்லியன் டாலர்கள் உயர்ந்து 292.101 பில்லியன் டாலராக ஆகஸ்ட் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இருந்தது என ரிசர்வ் வங்கி தன்னுடைய வாராந்திர அறிக்கையில் தெரிவித்திருந்தது.
யூரோ, பவுண்ட் மற்றும் யென்
ஒரு நாட்டின் இருப்பில் உள்ள டாலரின் மதிப்பு, அதன் டாலர், யூரோ, பவுண்ட் மற்றும் யென் என மொத்த அன்னிய நாணயச் சொத்துக்களின் மதிப்பு கூடுதல் அல்லது குறைதலைப் பொறுத்து அமையும்.
தங்க இருப்பு
உலக நாடுகள் தங்களது தங்க இருப்பை படிப்படியாக குறைத்து வரும் நிலையில் உலக சந்தைகளில் தங்கத்தின் மீதான வர்த்தகம் மந்தமாக உள்ளது. இதனால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நாட்டின் ரிசர்வ் வங்கி தங்க இருப்பில் எந்தவித வர்த்தகமும் செய்யாமல் உள்ளது. இதனால் தற்போது இருக்கும் தங்க இருப்பின் சொத்து மதிப்பு 21.173 பில்லியன் டாலராகும்.