டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி நடப்பு நிதியாண்டில் பங்கு சந்தை மற்றும் கடன் சந்தையில் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டுடன் இந்திய சந்தையில் இந்நிறுவனம் சுமார் ரூ.3 இலட்சம் கோடி அளவு முதலீடு செய்துள்ளது.
அதுகுறித்து இக்காப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் ராய் அவர்கள் கூறுகையில்,"ஏற்கனவே சந்தையில் 2.5 இலட்சம் கோடி முதலீடு செய்த நிலையில் மேலும் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்" என அவர் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனம் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மற்றும் மகாராஷ்டிரா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகளில் தனது முதலீட்டை அதிகரித்துள்ளது. மேலும் ஓஎன்ஜிசி மற்றும் என்ஹெச்பிசி ஆகிய நிறுவனங்களில் தனது முதலீட்டை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்.ஐ.சி நிறுவனம் மட்டும் அல்லாமல் மத்திய அரசும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 43,425 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையாக சுமார் 14,016 கோடி ரூபாய் பெற்றது.