டெல்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில் 55,000 இந்திய கிராமங்களில் மொபைல் இணைப்புகளை ஏற்படுத்துவதற்காக ரூ.20,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
நாடு முழுவதிலும் மொபைல் போன் சேவைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அடுத்த வீட்டுக்காரருடன் தொடர்பு கொண்டு பேசுவது முதல் இண்டர்நெட் வங்கி சேவை வரை நம் வாழ்க்கையின் அனைத்து அனைத்துப் பயன்பாடுகளுக்கும் மொபைல் போன் சேவை தேவைப்படுகிறது.
பஸ், ரயில் மற்றும் விமானப் பயணங்களின்போது பயணிகள் அனைவரும் பிரிண்ட் செய்யப்பட்ட டிக்கெட்டுகளைக் காண்பிப்பதற்குப் பதில் தங்களுடைய ஸ்மார்ட் போன்களின் மூலம்தான் தங்கள் டிக்கெட்டுகளைக் காண்பிக்கிறார்கள். அந்த அளவுக்கு மொபைல் வசதிகளின் தேவை பெருகியுள்ளது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு இந்தியாவில் மொபைல் இணைப்புகளை மேலும் பல மடங்கு விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
55,000 கிராமங்களுக்கு ரூ.20,000 கோடி
இந்த மொபைல் இணைப்புகளை 55,000 கிராமங்களில் ஏற்படுத்துவதற்காக ரூ.20,000 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.
நிதியுதவி
யுனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேசன் ஃபண்டு (USOF) என்ற நிதி நிறுவனத்தின் மூலம் மத்திய அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.
'டிஜிட்டல் இந்தியா'
'டிஜிட்டல் இந்தியா' என்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இத்தகவலைத் தெரிவித்தார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களும், செயலாளர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
பிரதமர் முக்கியத்துவம்
'டிஜிட்டல் இந்தியா' என்ற கான்செப்ட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும், இதன் மூலம் அனைத்து மாநில அரசுத் துறைகளும் விரைவில் ஹைடெக் துறைகளாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் அப்போது கூறினார்.
இ-காமர்ஸ்
மத்திய அரசு அளித்து வரும் அதிவேக பிராட்பேண்ட் இணைப்புகள் மூலம் இ-காமர்ஸ் மாபெரும் வளர்ச்சியைச் சந்திக்க உள்ளதாகவும் கூறிய அமைச்சர் பிரசாத், இதன் மூலம் நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களில் உள்ளவர்களும் பயனடைவார்கள் என்பது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.