மும்பை: நிரந்தர வைப்பு நிதித் திட்டங்கள் மூலம் ரூ.1,000 கோடி அளவுக்கு பெரும் மோசடி நடந்திருப்பதாக நாட்டின் சில முக்கிய வங்கிகளைச் சேர்ந்த அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மும்பை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் இது தொடர்பாக 10 எஃப்.ஐ.ஆர்.(FIR)களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் நடந்த மாபெரும் ஊழல்களைப் பற்றி சமீபத்தில்தான் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
ரூ.1,000 கோடி மோசடி
இந்த நிலையில் நிரந்தர வைப்பு நிதித் திட்டங்கள் மூலம் கடன் பெறுவதில் ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடன் பெறுவதில் மோசடி
தென் இந்திய கல்வி சங்கம், மும்பை பெருநகர வளர்ச்சித் துறை மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை ஆகிய நிறுவனங்களின் நிரந்தர வைப்பு நிதிகளின் மூலம் கடன்கள் பெறுவதில் இந்த மாபெரும் மோசடி நடந்திருப்பதாகத் தெரிகிறது.
சிக்கிய வங்கி அதிகாரிகள்
தேனா வங்கி, யூகோ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிண்டிகேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, ஓரியண்டல் வணிக வங்கி மற்றும் தனலட்சுமி வங்கி ஆகிய பொதுத் துறை வங்கிகளைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த மஹா ஊழலில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுவரை 6 பேர் கைது
இந்த ஊழல் தொடர்பாக, இதன் மாஸ்டர் மைண்டாக விளங்கிய ஷோமேன் குழுமத்தைச் சேர்ந்த முகமது ஃபாஸியுதீன் உள்பட 6 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.