கான்பெர்ரா: அணுமின் உற்பத்திக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனியத்தை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா பிரதமர் ஒப்புக்கொண்டார். இதற்கான ஒப்பந்தத்தில் இந்த வாரத்தில் கையெழுத்திடவும் அவர் சம்மதித்தார். இதனுடன் அவர் ரஷ்ய ஏற்றுமதியின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் நீட்டித்துள்ளார்.
ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் வரும் வியாழக்கிழமையன்று நாட்டின் புதிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்க 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லி வருகிறார். இந்த சுற்றப்பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
இந்திய வளர்ச்சி
நாட்டின் புதிய பிரதமரின் செயல் திட்டங்களால் இந்தியாவின் வளர்ச்சி உச்சத்தை எட்டும் வண்ணம் உள்ளது. இந்த வளர்ச்சியில் ஆஸ்திரேலிய நாட்டின் பங்கும் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய உடனான எங்களின் நட்பை வெளிப்படுத்தும் எனவும் டோனி அபோட் தெரிவித்தார்.
ரஷ்யா மீதான தடை
சர்வதேச நாடுகளின் வழிமுறைகளை தவறிய ரஷ்யாவிற்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
யுரேனியம்
இன்றைய உலகில் மிகப்பெரிய சக்தியாக கருதப்படுவது அணு ஆயுதம் தான். ஒரு நாட்டின் அணுஆயுத சக்தியை வைத்து தான் அதன் மதிப்பு என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த அணுஆயுதத்திற்கு தேவையான மூலப்பொருளான யுரேனியம் அதிகளவில் வைத்துள்ள நாடுகளில் ஆஸ்திரேலியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
பல கட்டங்கள் தாண்டி
ஆஸ்திரேலியா இந்தியாவிற்கும் இடையே நடக்க இருக்கும் இந்த அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு ஒப்பந்தம் பல முறை தோல்வியை சந்தித்த பின்பே தற்போது கிட்டியுள்ளது. மேலும் இந்தியா ஜப்பான் உடன் ஒரு அணுசக்தி ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடதக்கது.