மும்பை: ஜப்பானைச் சேர்ந்த நிப்பான் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஒரு வங்கியை உருவாக்க ரிலையன்ஸ் குழுமம் முயற்சி செய்து வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமம், பல்வேறு தொழில்களில் கால் பதித்து சாதனை புரிந்து வருகிறது. அந்த வழியில் தற்போது ஒரு வங்கியையும் தொடங்க அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகிறது.
ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம்
அனில் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம்தான் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
ரிலையன்ஸ் வங்கி
ஜப்பானில் உள்ள நிப்பான் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து 'ரிலையன்ஸ் வங்கி'யைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களைக் குறிவைத்து இம்முயற்சியில் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது.
நிப்பான் - ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் கேப்பிடல் அசட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் 26% பங்குகளையும், ரிலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 26% பங்குகளையும் நிப்பான் நிறுவனம் வைத்துள்ளது. இதன் கராணமாகவே இந்தியா ஜப்பான் உடனான நட்புறவும் வலிமைபெற்று வரும் இத்தருணத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் நிப்பான் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
மோடியின் ஜப்பான் விஜயம்
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய ஜப்பான் பயணத்தின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி அனுமதிக்குமா?
வங்கி உரிமத்திற்காக ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் தற்போது ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பித்துள்ளது. கடந்த ஆண்டே இந்நிறுவனம் விண்ணப்பித்திருந்தது, ஆனால் லைசென்ஸ் கிடைக்கவில்லை. அதற்கான தகுதிகளும் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்திடம் இல்லை என்று ரிச்ர்வ் வங்கி பதில் அளித்தது.
'பேமண்ட் வங்கிகள்', 'சிறு உள்ளூர் வங்கிகள்'
சில நிபந்தனைகளுடன் கூடிய 'பேமண்ட் வங்கிகள்' மற்றும் 'சிறு உள்ளூர் வங்கிகள்' ஆகியவற்றுக்கு லைசன்ஸ் அளிப்பதில் ரிசர்வ் வங்கி அதிக அக்கறை காட்டி வருகிறது. எனவே இது தொடர்பான லைசென்ஸுகளைப் பெறுவதற்கு ஏராளமான நிறுவனங்கள் முனைந்து வருகின்றன.