டெல்லி: ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்வதற்கான ஆணைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும், பல்வேறு மாநில அரசுகளும் லட்சத்துக்கும் அதிகமான தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்து வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
மத்திய அரசின் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி மத்திய அரசு வழங்கிய பதில்களின் மூலம் 'India's surveillance state' என்ற ஆய்வு அறிக்கையை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்திய கண்காணிப்பு நிலை
'இந்திய கண்காணிப்பு நிலை' என்று அழைக்கப்படும் இந்த ஆய்வை சாஃப்ட்வேர் ஃப்ரீடம் லா சென்டர் என்ற நிறுவனம் நடத்தியது. 68 பக்கங்களைக் கொண்ட இந்த ஆய்வறிக்கையை சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள ஒரு இண்டர்நெட் கவர்னன்ஸ் ஃபோரம் வெளியிட்டது.
இணையதளம் மூலம்...
இதற்கான இணையதள அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகளை மத்திய அரசுக்கு அமைத்துக் கொடுப்பதற்கு 26 நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இதன் மூலம் போன் அழைப்புகள், சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க முடியும். நாடு முழுவதும் 1,000 இடங்களுக்கு மேல் இதற்கான NETRA சர்வர்கள் அமைக்கப்பட உள்ளன.
போன் கால்களை ஒட்டுக் கேட்கும் அரசு
ஒரு ஆண்டிற்கு சராசரியாக ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான தொலைபேசி உரையாடல்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்காணித்தும் பதிவு செய்தும் வருகின்றன. இந்தியாவில் சில நிறுவனங்களுக்கு இதற்கான அனுமதிகளை அரசு வழங்கியுள்ளது.
எல்லாம் சட்டப்படிதான்...
இந்திய டெலிகிராப் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவை தொலைபேசி உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதை அனுமதிக்கின்றன. இதன் மூலம் சாதாரண மக்களின் தொலைபேசி அழைப்புகள், இ-மெயில்கள், சமூக வலைத்தள நடவடிக்கைகள் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் கூர்ந்து கண்காணிக்க முடியும்.
நீரா ராடியா உரையாடல்கள்
கடந்த 2010ஆம் ஆண்டில் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் நீரா ராடியா தொலைபேசியில் உரையாடிய அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.