மும்பை: மத்திய அரசின் சீர்திருத்த திட்டங்களுக்கு ஏதுவாக அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தொடர்ந்து முதலீட்டை குவித்த வண்ணம் உள்ளனர். நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 9,000 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலிடுகளாக செய்யப்பட்டுள்ளன.
செப்டம்பர் 1 முதல் 5 தேதிகளில், அன்னிய முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் 3,972 கோடி ரூபாயும் (656 மில்லியன் அமெரிக்க டாலர்கள்), அதே கால கட்டத்தில் 5,013 கோடி ரூபாயை (828 மில்லியன் டாலர்) கடன் சந்தையிலும் முதலீடு செய்துள்ளனர்.
9,000 கோடி ரூபாய்
பங்கு சந்தை மற்றும் கடன் சந்தைகளில் கடந்த வாரத்தில் மட்டும் 8986 கோடி ரூபாய் அதாவது 1.5 பில்லியன் டாலர் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அன்னிய முதலீட்டாளர்கள்
மத்தியில் புதிய அரசு அமைந்த மூதல் பல்வேறு நிதிச் சீர்திருத்தங்களை செய்து வருவதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (அன்னிய அமைப்பு சார் முதலீட்டாளர்கள், துணை அமைப்புகள் அல்லது நிதி முதலீட்டு நிறுவனங்கள் ) மிகுந்த நம்பிக்கையுடன் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள்
அடுத்து வரும் மாதங்களிலும் மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடுகள் அதிகரிக்கும் எனவும் நிதியமைச்சகம் மற்றும் சந்தை முதலீட்டு வல்லுனர்கள் கணிக்கின்றனர். நேற்றைய வர்த்தகத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் அதிகப்படியான முதலீட்டை பெற்றது குறிப்பிடதக்கது.
1.9 லட்சம் கோடி ரூபாய் முதலீடு
நடப்பு நிதியாண்டு துவக்கம் முதல் அன்னிய முதலீட்டாளர்கள் சுமார் 1.9 லட்சம் கோடி ரூபாய் (31.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அளவிற்கு இந்திய சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர். இந்த முதலீடுகள், 82,307 கோடி ருபாய் பங்கு சந்தை முதலீடுகளாகவும், 1.07 லட்சம் கோடி ரூபாய் கடன் சந்தை முதலீடுகளாகவும் உள்ளது.
பங்கு சந்தை
அதிகப்படியான அன்னிய முதலீடுகளால் பங்குச் சந்தைகள் உயரிய இடத்தை அடைந்து வருகிறது. மேலும் பங்கு சந்தையை உந்திச் செல்லும் முக்கிய சக்தியாக விளங்கும் அன்னிய முதலீடுகள், சென்செக்ஸ் புள்ளிகளை கடந்த ஒரு மாதத்தில் 25,500 புள்ளிகளில் இருந்த 27,200 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
டாலர்
அதிகப்படியான டாலர் உள்ளீடுகளால் ருபாய்க்கு எதிரான டாலர் மதிப்பு கடந்த ஒரு மாதத்தில் 61.30 ரூபாயில் இருந்து 60.50 ரூபாயாக ஆக உயர்ந்துள்ளது.