சென்னை: 'நாம் பிறக்கும் போது கூட ஃப்ரீயாதான் பிறக்கிறோம். ஆனால் சாகும் வரை வரி கட்டித் சாகிறோம்' என ஒரு ஆங்கில பழமொழி உண்டு. அந்த அளவுக்கு நாம் வாழ்க்கையோடு வரி பின்னிப் பிணைந்துள்ளது.
வரி கட்டுவது தொடர்பாக அந்தக் காலத்தில் பெரும் நிலச் சண்டைகளே நடந்திருக்கிறது. ஆனால், இப்போது? நாம் ஒழுங்காகச் சம்பாதிக்கிறோமோ இல்லையோ, நாம் பயன்படுத்தும் பொருளுக்கும் இந்த அரசாங்கத்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வரிகளைக் கட்டிக் கொண்டுதான் இருக்கிறோம். இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் எப்படி வரி செலுத்தப்பட்டது தெரியுமா???
வருமான வரி
வரி என்றாலே நம்மில் பலருக்கும் அலர்ஜிதான். அதிலும் வருமான வரி கட்ட வேண்டும் என்றால் பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயம்தான். வருஷத்துக்கு 3% அதிகமாகி 30% வருமான வரி கட்டுகிறோமே என்று கவலைப்படுகிறீர்களா? 40 வருஷத்துக்கு முன் வருமான வரி விகிதம் எப்படி இருந்தது என்று கேட்டுப் பாருங்கள்!
அப்போ 70% வருமான வரி
40 வருஷத்துக்கு முன், வருஷத்துக்கு ரூ.70,000க்கு மேல் வருமானம் பெற்றுக் கொண்டிருந்தவர்கள் 70% வருமான வரி கட்ட வேண்டியிருந்தது. மாத வருமானம் ரூ.6,000க்கும் குறைவாகப் பெற்றவர்களுக்கு வரி விலக்கு இருந்தது.
படிப்படியாகக் குறைந்த வரி விகிதம்
1974-75ல் மொத்தம் 8 வரி பிராக்கெட்டுகள் இருந்தன. ஆனால், 1980களில் நிலைமை கொஞ்சம் வளர்ந்து, ரூ.15,000க்கும் கீழ் வருமானம் பெற்றவர்களுக்கு வரி விலக்கு இருந்தது. வருஷத்துக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் பெற்றவர்கள், வருமான வரி விகிதம் 55%-ஆகக் குறைந்தது. இந்த நிலை மேலும் வளர்ந்து, 1990களில் வருமான வரி விகிதம் 40% ஆனது. வரி பிராக்கெட்டுகளும் 4ஆகக் குறைந்தது.
இப்போ கோடீஸ்வரர்களுக்கே 36.3%தான்!
இப்போது வருமான வரி விகிதங்கள் 10, 20, மற்றும் 30% என்ற அளவிலேயே உள்ளன. ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் கூடுதலாக 10% வரி உண்டு. டாப் வருமான வரி பிராக்கெட்டில் உள்ளவர்களே முக்கி முக்கிப் பார்த்தாலும் 36.3%தான் வருமான வரி கட்டுகிறார்கள்.
பொருளாதார சீர்திருத்தங்கள்
இந்த 40 ஆண்டு காலங்களில் இந்தியாவை 'ஆட்சி' செய்த அரசுகள் மேற்கொண்ட பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாகவே நிலைமை இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது.
வரி விலக்கு சலுகைகள்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே இருந்த ஸ்லாப்புகள் விலக்கப்பட்டன. வயதானவர்களுக்காக, குறிப்பாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. சமீபத்தில் பதவியேற்ற பா.ஜ.க. அரசின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வரி விலக்கு வரம்பை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரித்தார்.
வருமான வரி தாக்கல்
அதேபோல், 1970களில் வருமான வரிக் கணக்குகளைச் சமர்ப்பிப்பதும் பெரும் தொல்லையாக இருந்தது. வரிசைகளில் நிற்கும் கவலை மட்டுமல்லாமல், ஆண்டு வருமான விவரங்களை சேகரித்து, Form 16-ல் நிரப்பி, முந்தைய ஆண்டில் விடுபட்ட கணக்குகளுக்கென்று தனியாக ஒரு ஃபார்மை நிரப்பி, அதையும் இந்த வருடத்துக் கணக்கோடு சேர்த்து, உள்ளூர் வருமான வரி அலுவலகத்துக்கு ஓடி, வரிசையில் நின்று... இப்படி மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டி இருந்தது.
இ-ஃபைலிங்க்
ஆனால் இப்போது எல்லாம் கம்ப்யூட்டர் மற்றும் இண்ட்டர்நெட் மயமாகி விட்டது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பத்தே நிமிடங்களில் அனைத்துத் தகவல்களையும் நிரப்பி, ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் வருமான வரியைத் தாக்கல் செய்து விடலாம்.