சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின், வீட்டு காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ. 33 ஆயிரம் கோடி அளவு கடன் வழங்க நிர்ணயம் செய்துள்ளது. இத்தகவலை இப்பிரிவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சுனிதா சர்மா தெரிவித்தார்.
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் குறைந்த வட்டித் தொகையில் வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. இந்தியாவில் வீட்டுக் கடனுக்கு குறைந்த வட்டி வகிதம் அளிக்கும் நிறுவனங்களில் எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் முதன்மை நிறுவனமாக உள்ளது.
சுனிதா சர்மா
சென்னையில் நடந்த கண்காட்சியை திறந்துவைத்து பேசிய சுனிதா சர்மா கடந்த நிதியாண்டில் எங்கள் மையத்தின் வளர்ச்சி 18% உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்கிய நிலையில் இந்தாண்டு ரூ.33,000 கோடி கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.
உங்கள் இல்லம் 2014
எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் தலைமையில் உங்கள் இல்லம் 2014 என்னும் கண்காட்சி சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இம்மாதம் 14-ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது.
வீட்டுக் கடன்
சென்னையில் நடந்த இக்கண்காட்சியில் வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவது மற்றும் அதன் தொடர்பான கடன் வழங்கும் சாத்தியங்கள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனைகள் வழங்கப் படுகின்றன.
17வது வருட கண்காட்சி
சென்னையில் 17-வது ஆண்டாக நடக்கும் இந்த மூன்று நாள் கண்காட்சியை சுனிதா சர்மா தொடங்கி வைத்தார்.