டெல்லி: இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த அன்னாட்டு அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மலிவு விலை விமான சேவை வழங்கும் இண்டிகோ நிறுவனம், விமானம் வாங்குவதற்காக சீனாவின் மிகப்பெரிய வங்கியான இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்ஷியல் பாங்க் ஆஃப் சீனா (ஐசிபிசி) உதவியுடன் சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 15000 கோடி ரூபாய்) மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஏர்பஸ் ஏ320
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, ஐசிபிசி-யின் துணை நிறுவனமான ஐசிபிசி ஃபைனான்சியல் லீசிங் கம்பெனி, இண்டிகோவிற்கு, ஏர்பஸ் ஏ320 மற்றும் பிற ரக விமானங்களை வாங்க நிதி உதவி செய்வதுடன், இதை விற்பனை செய்து குத்தகைக்கு விடவோ, அல்லது முழுவதும் நிதி குத்தகையாகவோ அல்லது வர்த்தகக் கடனாகவோ அளிக்கும்.
இண்டிகோ நிறுவனம்
"விமானங்களின் எண்ணிக்கை முப்பதிற்கும் அதிகமாகவும், இவற்றின் மொத்த மதிப்பு 2.6 பில்லியன் அமெரிக்க டாலராகவும் இருக்கும்" என இண்டிகோ வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி நிலைமை
"இண்டிகோவின் இயக்கம் மற்றும் நிதிநிலை நீடித்த மற்றும் ஸ்திரமான நிலையில் உள்ளதற்கு இந்த ஒப்பந்தம் ஒரு உதாரணம்" என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக விரிவாக்கம்
இந்திய விமான போக்குவரத்து சேவையில் முன்னணி நிறுவனமாக திகழும் இண்டிகோ, தனது சேவையை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விரிவாக்கும் செய்யவே இந்த ஒப்பந்தம் என தெரிவித்துள்ளது.