டெல்லி: நாட்டின் பொருளாதாரத்திற்கு தூண்களாக இருக்கும் எட்டு துறைகள், நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 5.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. 2014ஆம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் இத்துறைகளின் வளர்ச்சி 4.7 சதவீதமாக இருந்தது என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உற்பத்தியில் வளர்ச்சி
நிலக்கரி, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி 13.4 சதவீதம், 10.3 சதவீதம் மற்றும் 12.6 சதவீதம் தத்தம் அளவில் அதிகரித்துள்ளது. மேலும் நிலக்கரி சுரங்களின் உரிமம்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளாதால் அடுத்த சில மாதங்களுக்கு மின் உற்பத்தி மற்றும் நிலக்கரி உற்பத்தியில் தொய்வு காணப்படும்.
எஃகு உற்பத்தி
இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் இரும்பு முக்கிய இடம் வகிக்கிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் உருக்கு உற்பத்தி 9.1 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 8.1 சதவீதம் என்ற அளவில் இருந்தது குறிப்பிடதக்கது.
கச்சா எண்ணெய்
இதே காலகட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 4.9 சதவீதமாகவும், இயற்கை எரிவாயு உற்பத்தி 8.3 சதவீதமாக இருக்கிறது. மேலும் மத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகம் டீசல் விலை குறைக்க பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை 60 பைசா வரை குறைந்துள்ளது.
சரிவை சந்தித்த நிறுவனங்கள்
பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகிய துறைகளின் உற்பத்தி ஆகஸ்ட் மாதம் சுமார் 4.3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
8 துறைகள்
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி சுமார் 4.4 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 4.2 சதவீதமாக இருந்தது.
தொழில்துறை உற்பத்தி குறியீட்டு
நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் (ஐ.ஐ.பி.,) கணக்கிடுவதில், மேற்கண்ட முக்கிய எட்டு துறைகளின் பங்களிப்பு, 38 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.