டெல்லி: இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய வரிசையில் நிற்கும் நிலையில் ரூ.1,546.12 கோடி மதிப்பிலான 25 அந்நிய முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், ரூ.1,800 கோடி மதிப்பிலான ஒரு பார்மா திட்டத்தையும் மத்திய கேபினட் குழுவுக்குப் பரிந்துரைத்துள்ளது. இரு திட்டங்களுக்கான ஒப்புதலை நிலுவையில் போடப்பட்டுள்ளன. தவிர, மும்பையைச் சேர்ந்த வெரித்தாஸ் (இந்தியா) நிறுவனத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அந்நிய முதலீட்டு மேம்பாட்டுக் குழு
அந்நிய முதலீட்டு மேம்பாட்டுக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் 25 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சிங்கிள்-பிராண்டு சில்லரை வர்த்தகம்
இவற்றில், ஆறு சிங்கிள்-பிராண்டு சில்லரை வர்த்தகங்களும் அடங்கும். சிங்கப்பூரின் பெஸ்ட்செல்லர் யுனைட்டட், பிரிட்டனின் லஷ் மற்றும் ஆஸ்திரியாவின் ஆஸ்த்ரியா பூமா டேசிய்ர் கெசெல்சாஃப்ட் ஆகிய நிறுவனங்களும் இவற்றில் அடங்கும்.
மல்ட்டி-பிராண்டு சில்லரை வணிகம்
மேலும், ரூ.50.5 கோடி முதலீட்டிலான ஃப்ளெமிங்கோ இண்டர்நேஷனல் மற்றும் மியாமி பெர்ஃப்யூம் ஜங்ஷன் நிறுவனங்களின் மல்ட்டி-பிராண்டு சில்லரை வணிகத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விமானங்களில் விற்பனை
ட்யூட்டி-ஃப்ரீ பகுதிகளில் கடைகளை அமைப்பதற்கும், சர்வதேச விமானங்களில் பொருள்களை விற்பதற்கும் மல்ட்டி-பிராண்டு சில்லரை வணிகத் திட்டங்கள் வழி வகுக்கும்.
லாரஸ் லேப்ஸ்
பிரபல பார்மா நிறுவனமான லாரஸ் லேப்ஸின் ரூ.600 கோடி மதிப்பிலான திட்டம் உள்பட மூன்று அந்நிய பார்மா நிறுவனங்களுக்கும் அனுமதி அளித்துள்ளது மத்திய நிதி அமைச்சகம்.