சிங்கப்பூர்: போர்க்கப்பல் தயாரிப்பில் பல நாடுகள் முன்னோடியாக இருக்கும் போது இப்போட்டியில் இன்று வரை இந்தியா பின்தங்கியே உள்ளது. இந்நிலையில் இந்தியா சிங்கப்பூருடன் சேரும் போது போர்க்கப்பல் தயாரிப்பில் உலகளவில் புதிய இடத்தை அடைய முடியும் என இந்நிய கடற்படையின் வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த காம்பினேஷன் புதிதாக இருந்தாலும், கண்டிப்பாக வெற்றியை தரும் என நேஷனல் மேரிடைம் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் கேப்டன் குர்பிரிட் எஸ் குரானா தெரிவித்தார்.
சிங்கப்பூர்- இந்தியா
தொழில்நுட்பம் மற்றும் டிசைன் சார்ந்த உதவிகளை சிங்கப்பூர் அளிப்பதன் மூலம் இந்தியாவில் குறைந்த செலவில், தரமான போர்க்கப்பல்களை தயாரிக்க முடியும் என குரானா தெரிவித்துள்ளார். இந்தியாவில் போர்க்கப்பல் தயாரிப்புக்கு தேவையாக உலோகம், பணியாளர்கள் மற்றும் திறன்கள் அதிகளவில் உள்ளது. இதனைக் கொண்டு எளிதில் சாத்தியப்படுத்த முடியும் என சிங்கப்பூர்-இந்தியா மூலோபாய மற்றும் பாதுகாப்பு உடன்பாட்டு கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.
கைகொடுக்கும் திட்டங்கள்
இருநாடுகளின் இணைப்பை எளிமையாககும் விதமாக இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டம் மற்றும் பாதுகாப்பு துறையில் 49 சதவீத அன்னிய முதலீடு ஆகியவை வழிவகுக்கும் என அவர் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறையில் ஆய்வுகள்
இந்தியாவில் பாதுகாப்பு துறையில் வன்பொருள் உருவாக்குவதற்கும், இத்துறைக்கு தேவையான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கவும் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இது இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் என அவர் தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்கள்
மத்திய அரசு பாதுகாப்பு துறையில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் பல தனியார் நிறுவனங்கள் இத்துறையில் ஆர்வத்துடன் ஈடுப்பட்டு வருகிறது. இதுமட்டும் அல்லாமல் பல மத்திய மற்றும் மாநில நிறுவனங்களும் ஈடுப்பட்டு வருகிறது.
இந்தியா-ஜப்பான்
மேலும் சில வருடங்களில் பாதுகாப்பு துறையில் வன்பொருள் உற்பத்தியை ஜப்பான் நாட்டுடன் இணைந்து செயல்படுத்த உள்ளது. அடுத்த பத்து வருடங்களில் இத்துறையில் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 150 பில்லியன் டாலராக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.