டெல்லி: மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை மின்னணு முறையில் ஏலம் நடத்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் 22 வட்டங்களுக்கான அலைவரிசையை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெலிகாம் நிறுவனம் ஏலத்திற்கான பிட்டிங் சமர்ப்பிக்க கடைசி நாள் நவம்பர் 11.
இத்துறையில் போட்டிகள் அதிகரித்துள்ள காரணத்தினால் ஏலத்தின் மதிப்பு கடுமையாக உயரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இதனால் டெலிகாம் நிறுவனத்தின் சேவை கட்டணங்கள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிறுவனங்களும் இதுகுறித்து எச்சரித்துள்ளது.
கடன் அதிகரிப்பு
இத்துறை தற்போது 2,50,000 கோடி ரூபாய் கடனில் செயல்பட்டு வருகிறது. இந்த ஏலத்தின் மூலம் இத்துகை கடன் அளவு 3,00,000 கோடி வரை உயரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இக்கடன் தொகையை குறைக்க நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக COAI அமைப்பு தலைவர் ராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏலம்
மேலும் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெட்ரம் ஏலத்தில் டிராய் அமைப்பு குறைவான அளவிலேயே அலைவரிசையை ஏலத்தில் விற்றது. இதனால் இம்முறை அதிகளவிலான அலைவரிசை ஏலத்திற்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
போட்டி
இந்த ஏலத்தில் வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார் மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் முக்கிய ஆட்களாக இருப்பார்கள். இந்தியாவின் சில முக்கிய இடங்களில் இந்நிறுவனத்தின் அலைவரிசை ஒப்பந்தம் 2015, 2016ஆம் ஆண்டுகளில் முடிவடைகிறது, இதனால் இந்த மின்னணு ஏலம் மிக முக்கியமாக இந்நிறுவனங்களுக்கு அமைகிறது.
ஏல கட்டணங்கள் உயர்வு
தற்போது ஏலம் மத்திய அரசு ஏலம் விடும் 20 வட்டஙகளில் 1800MHz ஸ்பெக்ரத்தில் ஒரு MHzஸ்பெக்ட்ரத்திற்கு 2,138 கோடியாக கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல் 900MHz ஸ்பெக்ரத்தில் ஒரு MHzஸ்பெக்ட்ரத்திற்கு 3,004 கோடியாக கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதம் ஏல விலையை விட 10 சதவீதம் அதிகமாகும்.