டெல்லி : இந்தியாவில் நடப்பு 2014-15 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதங்களில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 17.6 சதவீதம் வளர்ச்சி கண்டு 49800 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் இதன் ஏற்றுமதி 16 சதவீதம் அதிகரித்து 7800 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.சீனாவில் தொழிலாளர்களுக்கான செலவினம் அதிகரித்து வருவது, வங்க தேச தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை சர்வதேச விதிமுறைகளை பின்பற்றாதது, ரூபாய் மதிப்பு உயர்வு உள்ளிட்டவை இந்திய ஆடைகள் ஏற்றுமதிக்கு சாதகமாக அமைந்துள்ளது என ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் வீரேந்தர் உப்பல் தெரிவித்தார்.
உலகளவில் ஆடைகள் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள சீனா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளை காட்டிலும் குறைந்த விலை சிறந்த தரம் குறித்த நேரத்தில் வினியோகம் போன்றவற்றை இந்திய ஏற்றுமதியாளர்கள் அளிப்பதால் சர்வதேச அளவில் இந்திய ஆடைகளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து ஆதரவான கொள்கை திட்டங்கள் கிடைக்கப் பெற்றால் ஆடைகள் ஏற்றுமதி வர்த்தக விறுவிறுப்பிற்கு மேலும் உதவிகரமாக அமையும் என உப்பல் தெரிவித்தார்.ஆடைகள் ஏற்றுமதி துறை சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.
மேலும் அமெரிக்க சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது என ஏ.இ.பி.சி பொது செயலர் புனித் குமார் தெரிவித்தார்.