டெல்லி: இந்தியாவில் வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருக்கும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியுள்ளார்.
நிதித்துறை இணையமைச்சராக நேற்று பதவியேற்றபின் பத்திரிகையாளர்களிடம் அவர் பேசுகையில், "அரசினைப் பொறுத்த வரையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பணவீக்கம் கட்டுப்படுத்துதல்தான் முதன்மைப் பணி.
நடப்பு நிலையுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அடுத்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் முதல் 6.5 சதவீத அளவுக்கு வளர்ச்சியடையும். வரும் ஆண்டுகளில் இது 7 சதவீதம் முதல் 8 சதவீத அளவை எட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீத அளவுக்குச் சரிந்தது. இது நடப்பு நிதி ஆண்டில் 5.4 சதவீதம் முதல் 5.9 சதவீத அளவுக்கு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத் தொடரில் காப்பீடு மசோதா மற்றும் சரக்கு சேவை வரி மசோதா நிறைவேற்றப்படும் என்று ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் நமது செலவுகள் ஓரளவுக்கு கட்டுக்குள் வரும். இதன் மூலம் நமது பற்றாக்குறை அளவு கணிசமாகக் குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.