மும்பை: நஷ்டத்தை கட்டுப்படுத்த தன்னிடம் உள்ள விமானங்களின் எண்ணிக்கையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் குறைத்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நஷ்டத்தை கட்டுப்படுத்த தன்னிடம் உள்ள விமானங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது. கடந்த 6 மாதங்களில் ஸ்பைஸ்ஜெட் தன்னிடம் இருந்த 10 போயிங் 737 ரக விமானங்களை லீஸுக்கு எடுத்தவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டது. இதனால் அதனிடம் இருந்த விமானங்களின் எண்ணிக்கை 58ல் இருந்து 48 ஆக குறைந்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் தற்போது 15 பம்பார்டியர் க்யூ 400 ரக விமானங்களையும், 33 போயிங் 737 ரக விமானங்களையும் இயக்கி வருகிறது. சூரத் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் எருமையின் மீது மோதியதால் சில விமான சேவையை நிறுத்த வேண்டியதாகிவிட்டது.
இது குறித்து ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
லீஸுக்கு விட்டவர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்ட போயிங் விமானங்கள் பழையது. எங்களிடம் தற்போது 33 போயிங் 737 ரக விமானங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கை வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 35 அல்லது 36 ஆக அதிகரிக்கும் என்றார்.
ஸ்பைஸ்ஜெட் தன்னிடம் உள்ள விமானங்களின் எண்ணிக்கையை குறைத்து வரும் வேளையில் அதன் போட்டி நிறுவனமான இன்டிகோ விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இன்டிகோ அண்மையில் தான் தனது 100வது விமானத்தை வாங்கியது.
2014-2015ம் நிதியாண்டின் முதல் காலிறுதியில் ரூ.124 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், முன்னதாக 2014ம் நிதியாண்டில் ரூ.1,000 ஆயிரம் கோடி வருடாந்திர நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.