டெல்லி: ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில் இந்திய வங்கிகள் பெற்ற வைப்புத் தொகையின் மதிப்பு ரூ. 81.14 லட்சம் கோடியாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் வைப்புத் தொகைகள், கடன் தொகைகள் தொடர்பான காலாண்டு அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவித்துள்ள விவரம்:
வைப்புத்தொகை உயர்வு
இரண்டாம் காலாண்டில், இந்திய வங்கிகள் மொத்தமாகப் பெற்ற வைப்புத் தொகை 12 சதவீத அளவு வளர்ச்சி பெற்றது. பொதுத் துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், பிற வங்கிகள் என அனைத்து வங்கிகளும் பெற்ற வைப்புத் தொகையின் மதிப்பு ரூ. 81.14 லட்சம் கோடியாகும். கடந்த நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு அளவில், வங்கிகளில் இருந்த வைப்புத் தொகையின் மதிப்பு ரூ. 72.26 லட்சம் கோடியாகும்.
கடன்களின் மதிப்பு
நடப்பு நிதியாண்டின் 2-ஆம் காலாண்டில், வங்கிகள் அளித்த மொத்த கடன்களின் மதிப்பு ரூ. 61.57 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கடன் அளிப்பு மதிப்பு ரூ. 48.88 லட்சம் கோடியாக இருந்தது.
பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பு
மொத்த வைப்புத் தொகையில், பொதுத் துறை வங்கிகளின் பங்களிப்பு 74 சதவீதமாகும். தனியார் வங்கிகளின் பங்களிப்பு 18 சதவீதமாக இருந்தது.
கடன் அளிப்பில் பொதுத் துறை வங்கிகளின் பங்களிப்பு 71 சதவீதமாக இருந்தது. இந்த வகையில் தனியார் துறை வங்கிகளின் பங்களிப்பு 20 சதவீதமாகும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் காலாண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.