டெல்லி: தங்கம் இறக்குமதிக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கம் இறக்குமதிக்கு ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கட்டுப்பாடுகளையும் தாண்டி அவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்குவது அதிகரித்து வருகிறது. இதனால் அரசின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது அபாயகரமான அளவுக்கு செல்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் தங்கம் இறக்குமதிக்கு மேலும் கட்டுப்பாடுகள் கொண்டு வர அரசு பரிசீலித்து வருகிறது. தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாக நகை வியாபாரிகள் ஏற்கனவே அரசிடம் முறையிட்டிருந்தனர். மேலும் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளால் தங்கக் கடத்தல்தான் அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.