டெல்லி: இந்தியாவில் வெளிநாடு பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும், தொழில் மற்றும் வர்த்தகம் சார்ந்த பயணிகளின் எண்ணிக்கைய உயர்ந்தவும் ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளுக்கு இணையதளம் மூலம் இ-விசா வழங்கும் திட்டம் மத்திய அரசு நவம்பர்-27 முதல் அறிமுகப்படுத்தபட உள்ளது.
மேலும் இத்திட்டத்தின் மூலம் வெறும் நான்கு நாட்களில் இந்தியாவிற்கு சென்று வர வெளிநாட்டு பயணிகள் விசா பெற முடியும்.
மென்பொருன் வடிவமைப்பு
இவிசா வழங்குவதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும், 27ஆம் தேதி முதல் இந்தியாவின் அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும் இத்திட்டம் செயல்பட துவங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டம்
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, ரஷ்யா, பிரேசில் ஜெர்மனி, தாய்லாந்து, அரபு நாடுகள், உக்ரைன், ஜோர்டான், நார்வே மற்றும் மொரிஷியஸ் இந்த வசதி அறிமுகப்படுத்த உள்ளது. இதன் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை வளர்ச்சி
சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக இத்திட்டத்தினை கொண்டு வர வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை எழுந்து வந்த சூழலில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக இருக்கும் என இந்திய சுற்றுலா கழக தலைவர் சுபாஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்கள்
டெல்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கோவா ஆகிய சர்வதேச விமான நிலையங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த முழு ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 நாட்களில் எலக்ட்ரானிக்-விசா
இத்திட்டத்தினால் மேற்கூறிய 43 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், விமான நிலையத்தில், இதற்கான வலைதளத்தில் கட்டணம் செலுத்தி நான்கு நாட்களில் இ-விசாவை பெற்றுக்கொள்ளலாம்.
13 நாடுகள்
முன்னதாக, தென்கொரியா, ஜப்பான், பின்லாந்து, சிங்கப்பூர், நியூசிலாந்து உள்ளிட்ட 13 நாடுகளுக்கு ஆன்லைன் விசா திட்டத்தினை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு பயணிகள்
கடந்த ஜனவரி முதல்-நவம்பர் வரை 51.79 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வந்து சுற்றுப்பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய புதிய வசதிகளால் இந்தியாவில் வெளிநாடு பயணிகளின் எண்ணிக்கை கண்டிப்பாக உயரும்.