ஹைதராபாத்: உலகின் மிக உயரமான கட்டடத்தை ஹைதராபாத்தில் அமைக்க தெலுங்கானா அரசு முடிவெடுத்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஹூசைன் சாகர் ஏரிக் கரையில் இந்தக் கட்டடத்தைக் கட்டவிருப்பதாக தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்.) தெரிவித்துள்ளார்.
இதைத் தவிர, அந்த ஏரியைச் சுற்றிலும் ஸ்கைஸ்க்ராப்பர்ஸ் எனப்படும் 40 உயரமான கட்டடங்களைக் கட்டவும் முடிவெடுத்துள்ளதாக கே.சி.ஆர். கூறியுள்ளார்.
துபாயில் உயரமான கட்டடம்
தற்போது, துபாயின் பூர்ஜ் கலிஃபா தான் உலகின் மிக உயரமான கட்டடம் அமைந்துள்ளது. 828 மீட்டர் உயரத்தில் 163 மாடிகளைக் கொண்டுள்ளது இந்த டவர்.
ஹைதராபாத்தில்...
இந்த துபாய் டவரின் உயரத்தை மிஞ்சும் வகையில் ஹைதராபாத்தில் உயரமான கட்டடத்தைக் கட்ட தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
சஞ்சீவையா பார்க்கில்...
ஹூசைன் சாகர் ஏரிக் கரையில் உள்ள சஞ்சீவையா பார்க்கில் இந்தக் கட்டடம் அமையவுள்ளதாக கே.சி.ஆர். கூறியுள்ளார்.
40 ஸ்கைஸ்க்ராப்பர்ஸ்
அதேபோல், ஹூசைன் சாகர் ஏரியைச் சுற்றிலும் 60 முதல் 100 மாடிகளைக் கொண்ட 40 உயரமான கட்டடங்களைக் கட்டப் போவதாகவும் கே.சி.ஆர். தெரிவித்தார்.
கோலாலம்பூர் போல...
இந்த ஸ்கைஸ்க்ராப்பர்ஸ் வந்தால் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரைப் போலவே ஹைதராபாத் நகரமும் மாறிவிடும். இந்தக் கட்டடங்களில் அரசு அலுவலகங்கள், தனியார் தொழில் அலுவலகங்கள், கேளிக்கை மையங்கள் ஆகியவை இயங்கும்.
100 ஏக்கரில்...
இந்தக் கட்டடங்களைக் கட்டுவதற்கு 100 ஏக்கரில் ஹூசைன் ஏரியைச் சுற்றிலும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பிரச்சனை?
அவை அனைத்தும் அரசுக்குச் சொந்தமானவைதான் என்பதால் ஒரு பிரச்சனையும் கிடையாது என்று கே.சி.ஆர். கூறினார்.
ஏரிக்குள் கழிவு நீர்?
மேலும், சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படியே இந்தக் கட்டடங்கள் கட்டப்படும் என்றும், அவற்றிலிருந்து வெளியேறும் கழிவுகள் ஏரிக்குள் செல்லாது என்றும் அவர் தெரிவித்தார்.