நியூயார்க்: 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது இணைய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதை மேற்கோள்காட்டி, இணையதள தொழில்நுட்பத்தை தீவிரவாதிகள் பயன்படுத்துவதை தவிர்க்க தேவையான இணைய உள்கட்டமைப்பு மாற்றங்களை செய்யுவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியா உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஐ.நா பாதுகாப்பு சபையில் கடந்த புதன்கிழமை நடந்த "பயங்கரவாதத்தை தடுக்க பன்னாட்டு கூட்டுறவு" என்ற தலைப்பில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் தூதர் அசோக் குமார் முகர்ஜி, " பயங்கரவாதிகள் அதிநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை தங்களது பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதை" தனது உரையில் குறிப்பிட்டார்.
மும்பை தாக்குதாலும்.. தொழில்நூட்பமும்...
2008ஆம் ஆண்டின் மும்பை தாக்குதலை நினைவு கூர்ந்த அவர், "இணையவழி ஒலி பரிமாற்ற(VoIP) தொழில்நுட்பம் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதை முதன்முறையாக அப்போதுதான் நாம் எதிர்கொண்டோம், இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள நாம் உறுதியாக இருக்கவேண்டுமெனில், அதற்கு தேவையான உலகளாவிய இணைய உள்கட்டமைப்பு மேலாண்மையில் மாற்றங்களை செய்ய நாம் ஒத்துழைக்க வேண்டும்", என்றும் குறிப்பிட்டார்.
முக்கிய உடன்படுக்கை
பயங்கரவாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் அல்லது அவர்களை வழக்கில் தொடர்பான நாடுகளிடம் ஒப்படைக்க வழிவகை செய்யும் சர்வதேச தீவிரவாதம் பற்றிய விரிவான உடன்படிக்கையை விரைந்து ஏற்படுத்த தனது ஒருமித்த குரலை தெரிவிக்க வேண்டுமென்று, ஐநா பாதுகாப்பு அவையை முகர்ஜி வலியுறுத்தினார்.
முட்டுக் கட்டை
எது தீவிரவாதம் என்று வரையறுப்பதில் முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளதால், சர்வதேச தீவிரவாதம் பற்றிய விரிவான வரைவு உடன்படிக்கை ஐநா பொதுசபையின் சட்ட குழுவில் தற்போது தேங்கி கிடக்கிறது.
பயங்கரவாத அமைப்புகள்
பல ஐரோப்பிய நாடுகள் உட்பட, 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 15,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு போராளிகள், சிரியா, ஈராக் மற்றும் அண்டை நாடுகளில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் வெளிவந்த பின்னணியில் ஐநா பாதுகாப்பு அவையின் இந்த பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூலி பிஷப்
ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி ஜூலி பிஷப் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.