டெல்லி: இந்தியாவின் மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இந்நிறுவனத்திற்கு மேலும் ஒரு பிரச்சனை வந்துள்ளது. இனி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு கடனாக எரிபொருள் வழங்க முடியாது என அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் தரையிறங்கியது. இதனால் இந்நிறுவனத்தின் இன்றைய விமான சேவை முற்றிலும் முடங்கியது.
எரிபொருள் விநியோகத்தில் பிரச்சனை
எண்ணெய் நிறுவனங்கள் நிலுவையில் உள்ள தொகையை செலுத்திவிட்டு விமானம் இயங்குவதற்காக எரிபொருள் பெற்றுக்கொள்ளுமாறு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
கடன் பரிந்துரை
இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு 600 கோடி ரூபாய் வரை கடன் அளிக்கலாம் எனவும் வங்கிகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.
எட்டு வார காலம்
மேலும் இத்தொகை இந்நிறுவனத்திற்கு அடுத்த 8 வார காலத்தில் நீண்ட கால முதலீட்டை பெறுவதற்கும், உருவாக்குவதற்கும் உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது விமான போக்குவரத்து அமைச்சகம்.
வங்கிகள் மறுப்பு
விமான போக்குவரத்து அமைச்சகம் நிறுவனத்தின் நிலை மற்றும் முதலீட்டாளர்களின் நிலையை உணர்ந்தே கடனுக்கான பரிந்துறையை அறிவித்தது. ஆனால் எந்த வங்கியும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு கடன் அளிக்க முன் வரவில்லை.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ்
தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிலையை பார்த்து இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளது. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 7,500 கோடி ரூபாய் கடனில் இன்னும் 5,000 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.
கருணை கொலை
மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முக்கிய பங்குதார நிறுவனமான கலாநிதி மாறன் தலைமை வகிக்கும் சன் குரூப் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"நிறுவனத்தின் நிலை இதை போன்று தொடர்ந்தால், நிறுவனத்தை கருணை கொலை செய்வது தவிர வேறு வழி இல்லை" என்று பகிரங்கமாக தெரிவித்தார் என எக்னாமிக்ஸ் டைம்ஸ் இணையதள பக்கத்தில் பதிவு செய்திருந்தது.
2,000 கோடி ரூபாய்
இந்நிறுவனம் எண்ணெய் நிறுவனம் மற்றும் ஏர்போர்ட் அத்தாரட்டி ஆஃப் இந்நியா நிறுவனங்களுக்கு சுமார் 2,000 கோடி ரூபாய் தொகையை நிலுவையில் வைத்துள்ளது.
பங்கு சந்தை
இன்று காலை வர்த்தகத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் 5.04 சதவீதம் சரிந்து 13.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.