டெல்லி: ரயில்வே அமைச்சகத்திற்கு நிதி திரட்டும் நிறுவனமாக திகழும் இந்திய ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (IRFC), நடப்பு நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலிறுதியாண்டில் 8,000 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. எக்ஸ்டர்னல் கமர்ஷியல் பாரோயிங்ஸ் (ECB) மூலமாக 500 மில்லியன் டாலரை (தோராயமாக 3,140 கோடி ரூபாய்) திரட்டிக் கொள்வதற்கு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அனுமதி அளித்துள்ளது.
ஆனால் நிதியை திரட்டுவதற்கான சரியான நேரத்தையும் குறிப்பிட்ட முதலீடு வகைகளையும் இன்னும் IRFC முடிவு செய்யாததால், ECB-யை அது பயன்படுத்துமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. கடன் பத்திரங்கள் மற்றும் கடன்கள் மூலமாக நிதியை திரட்டுவதன் தான் இந்நிறுவனத்தின் வாடிக்கையான முறையாகும்.
குறைந்த வட்டி விகிதங்கள்
நடப்பு நிதியாண்டில், IRFC இன்னும் சந்தையில் முதலீட்டை பெறவில்லை "கடந்த ஏப்ரல் முதல் வட்டி விகிதங்கள் அனைத்தும் 80-100 அடிப்படை புள்ளிகளால் குறைந்துள்ளது. அதே போல் வெளிப்புற சந்தையிலும் 0.5-0.6 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஆதலால் நீண்ட காலத்திற்கு அதிக பலனை அளிக்கும் வகையில் இத்திட்டம் அமையும்" என தகவலை இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், நிறுவனத்திற்குள் வரவேண்டிய தொகைகள் மற்றும் கடந்த நிதியாண்டில் திரட்டப்பட்டு வழங்கப்படாமல் இருந்த தொகையின் மூலமாக, ஏற்கனவே 4,000 கோடி ரூபாயை ரயில்வே துறையிடம் இந்நிறுவனம் ஒப்படைத்துள்ளது என அதிகாரப்பூர்வமான தகவல்கள் பிசினஸ் லைன் பத்திரிக்கையிடும் கூறியுள்ளது. ரயில் என்ஜின்கள், சரக்கு பெட்டிகள் மற்றும் ரயில் பெட்டிகள் போன்றவைகளை கொள்முதல் செய்வதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.