டெல்லி: 2015ஆம் நிதியாண்டுக்கான புதிய பட்ஜெட்டில் மத்திய அரசு சோலார் மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வண்ணம் இத்துறைக்கு சிறப்பான திட்டங்களுடன் அதிகப்படியான நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளது. இதன் படி இத்துறையின் மின் உற்பத்தியை அதிகரிக்க 5,800 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1,000 மெகா வாட்
இதில் இந்தியாவின் முக்கிய துறைகள் அனைத்தும், மத்திய அரசு அளிக்கும் 1,000 கோடி ரூபாய் நிதியுதவி உடன் 1000 மெகா வாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட சோலார் தளத்தை அமைக்க உள்ளது.
இந்தியன் ரயில்வே
இதற்கு என்.டி.பி.சி, NTPC, NHPC, CIL, IREDA மற்றும் இந்தியன் ரயில்வே போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இதில் இந்திய பாதுகாப்பு துறையும் இணைந்துள்ளது.
சோலார் பார்க்
இதுமட்டும் அல்லாமல் இந்த 5,800 நிதிதிட்டத்தில் இந்தியாவின் முக்கிய பகுதிகளில் சுமார் 25 சோலார் பார்க் கட்டமைக்கப்பட உள்ளது. இவை அனனத்தும் 500 மெகா வாட் முதல் 20,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தளமாக இருக்கும் என மத்திய அரசு செய்திவெளியீடுகள் தெரிவிக்கிறது.
12 மாநிலங்கள்
மேலும் இந்த சோலார் பார்க் அனைத்தும் இந்தியாவின் 12 முக்கிய மாநிலங்களில் அமைக்கப்பட உள்ளது. அவை குஜராத், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, உத்திர பிரதேசம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் ஒடிசா.
5 ஆண்டுகள்
இந்தியாவில் அமைக்கப்படும் 25 சோலார் பார்க் பணிகள் அனைத்தும் அடுத்த 5 ஆண்டுகளில் முடிவடையும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.