டெல்லி: ஸ்கைப், வைபர், பேஸ்புக் மெஸ்ஸெஞ்சர் மற்றும் கூகிள் ஹேங் அவுட் போன்ற பிரபலமான இணைய சேவைகளை பயன்படுத்தி, உலகெங்குமுள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் எவ்விதமான கட்டணமும் இன்றி பேசும் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கும் ஒரு சோகமான செய்தி.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல், இலவசமாக வழங்கி வரும் இந்த சேவைகளுக்கு கட்டணம் வசூல் செய்வதற்கு முடிவு செய்துள்ளது.
கட்டண உயர்வு
இந்த கட்டணம் சாதாரண டேட்டா பேக் கட்டணங்களை விட, சுமார் 16 மடங்கு அதிகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, 3G சேவையில் 10kb இணைய சேவை பயன்பாட்டுக்கு 0.25 பைசா என, வழங்கப்பட்டு வரும் சேவைக்கான கட்டணத்தை 4 பைசாவாக உயர்த்தவுள்ளது.
இணைய அழைப்பு சேவை
இந்த கட்டண உயர்வானது, குறைந்த கட்டணத்தில் இணைய அழைப்பு சேவைகளை பயன்படுத்துவதை தடுக்கும் முயற்சி என்று கருதப்படுகிறது.
இணைய ஒருமுகத்தன்மை
தனியார் மற்றும் அரசு வழியாக அனுமதிக்கப்பட்டுள்ள, இணைய ஒருமுகத்தன்மை (net neutrality) என்ற கருத்திற்கு எதிரானதொரு நடவடிக்கையாகவும் இந்த முயற்சி உள்ளது. பயனாளி, உட்கருத்து, இணைய தளம், பிளாட்பார்ம், பயன்பாடு, இணைக்கப்பட்டுள்ள பொருள் அல்லது தொடர்பு கொள்ளும் வழிமுறை என இணையம் வழியாக பெறும் சேவை, எந்த சேவையாக இருந்தாலும், அவற்றை ஒரே மாதிரியான சேவையாக கருத வேண்டும் என்பதே இணைய ஒருமுகத்தன்மை என்பதாகும்.
பிற நிறுவனங்கள்
இந்த நடவடிக்கை பற்றி வோடாபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய பிற சேவை நிறுவனங்கள் எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை. எனினும், இதன் மூலம் பிற நிறுவனங்களும் கூட இதேபோன்ற VOIP சேவைக்கான கட்டணங்களை வசூலிப்பதற்கான திட்டங்களை கொண்டு வரும் என்பது தெளிவு.