டெல்லி: மத்திய அரசிற்கு 65,000 கோடி ரூபாய் ஈட்டித் தரும் ஸ்பெக்ட்ரம் ஏலம் மார்ச் 4ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏலத்திற்கு விண்ணப்பம் அளிக்கும் நிறுவனங்களுக்கு கடைசி நாளாக பிப்ரவரி 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் மாற்றத்திற்கான அறிவிப்பை மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் தனது வலைதளத்தில் பதிவு செய்துள்ளது. மேலும் இதற்கான காரணத்தை அமைச்சகம் இதுவரை வெளியிடவில்லை.
இதற்கு முன் இந்த ஏலம் பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறுவதாகவும், விண்ணப்பம் அளிக்க பிப்ரவரி 6ஆம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
மிகப் பெரிய ஏலம்
மத்திய அரசின் வரலாற்றிலேயே விலை மதிப்பில் தற்போது நடைபெறபோகும் ஏலம் தான் அதிக மதிப்புடையது. இந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசிற்கு சுமார் 64,840 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.
ஸ்பெக்ட்ரம்
இந்திய தொலைதொடர்பு அமைச்சகம் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் ஏலத்தில் 380.75 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை முன்று அலைவரிசையில் விற்க உள்ளது அதாவது 800 மெகாஹெட்ஸ், 900 மெகாஹெட்ஸ், 1800 மெகாஹெட்ஸ். மேலும் 5 மெகாஹெட்ஸ் அலைகற்றை 2100 மெகாஹெட்ஸ் அலைவரிசையில் 3ஜி சேவைக்காக ஏலம் விட உள்ளது.
விலை பட்டியல்
தொலைதொடர்பு அமைச்சகம் 800 மெகாஹெட்ஸ் (3,646 கோடி ரூபாய்) , 900 மெகாஹெட்ஸ் (3,980 கோடி ரூபாய்) , 1800 மெகாஹெட்ஸ் (2,191 கோடி ரூபாய்) ஆகிய அலைவரிசைகளுக்கு விலை நிர்ணயம் செய்து ஒப்புதலும் பெற்றது. ஆனால் 2100 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்திற்கு மட்டும் விலை நிர்ணயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
17 வட்டங்கள்
மேலும் இந்த ஏலம் இந்தியாவில் இருக்கும் 22 தொலைதொடர்பு வட்டங்களில் 17 வட்டங்களுக்கும் மட்டும் நடக்கிறது.
நிதி திரட்டுதல்
மேலும் இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் 64,840 கோடி ரூபாய் நிதி மத்திய அரசின் நிதி பற்றாக்குறையை அதிகளவில் குறைக்கும் என தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.