அஹமதாபாத்: ஜப்பானின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான சுசூகி மோட்டார் கார்பரேஷன் நிறுவனம், குஜராத் மாநிலத்தில் 8,000 கோடி ரூபாய் முதலீட்டில் வருடத்திற்கு 7.50 இலட்ச வாகனங்கள் உற்பத்தியாகும் திறன் கொண்டு முன்று தொழிற்சாலைகளை அமைக்க உள்ளதாக மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி பார்கவா தெரிவித்தார்.
நீண்ட காலத்திற்கு பிறகு இந்தியாவில் உற்பத்தி திறனை மேம்படுத்த மாருதி சுசூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த மூன்று வருடத்தில் இந்நிறுவனத்தின் உற்பத்தி முழுவேகத்தில் இருக்கும்.
முதற் கட்டம்
இந்த முன்று தொழிற்சாலைகளில், முதல் தொழிற்சாலை பணிகளை உடனடியாக துவங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இத்தொழிற்சாலை 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் 640 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. வருடத்திற்கு 2.50 இலட்ச வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாக விளங்கும், மேலும் இப்புதிய தொழிற்சாலையில் உற்பத்தி பணிகள் 2017ஆம் ஆண்டு மத்தியில் துவங்கும்.
3,000 பணியாளர்கள்
இந்த புதிய தொழிற்சாலை அமைப்பதன் மூலம் 3000 பேருக் வெளிப்படையாகவும், 5000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் 640 ஏக்கர் தொழிற்சாலை வளாகத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே தொழிற்சாலை அமைய உள்ளது. மீதமுள்ள இடத்தில் தயாரித்த வாகனங்களை நிறுத்த பயன்படுத்தப்படும் என பார்கவா தெரிவித்தார்.
விவசாயிகள் எதிர்ப்பு
2012ஆம் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் குஜராத் மாநில அரசுடன் இணைந்து 700 ஏக்கர் நிலத்தை தொழிற்சாலை அமைப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது பின்பு கிராம மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
சுசூகி நிறுவனம்
தற்போது இத்தொழிற்சாலையை முழுமையாக சுசூகி நிறுவனத்தின் முதலீட்டு மூலமே நடக்க உள்ளது. மேலும் குஜராத் மாநில முதல் அமைச்சர் ஆனந்திபென் பட்டேல் இதற்கான அடிக்கல் நாட்டியுள்ளார்.
மேக் இன் இந்தியா
மேலும் இது திட்டம் குறித்து சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஒசாமு சுசூகி கூறுகையில், "இப்புதிய தொழிற்சாலை மத்திய மற்றும் மாநில அரசின் ஒப்புதல் மற்றும் உதவியுடனே செயல்படுத்தப்படுகிறது. மேலும் பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும்" என தெரிவித்தார்.