மும்பை: மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு இருப்பை குறைத்து நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன் படி கோல் இந்தியா நிறுவனத்தின் 10 சதவீத பங்கு இருப்பை குறைப்பதாகவும், இதனை ஆஃபர் பார் சேல் (OFS) என்ற முறையில் விற்பதாகவும் மத்திய அரசு அறிவித்தது.
இதன் படி கோல் இந்தியாவின் 63.16 கோடி பங்குகளை விற்கவும், இதற்கு வியாழக்கிழமை பங்குச்சந்தை முடிவடைந்த விலையை ஒப்பிட்டு ஒரு பங்கிற்கு 358 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த 4,500 கோடி ரூபாய் மதிப்புடை பங்குகளை சில்லறை முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இதை சிறு முதலீட்டாளர்கள் வாங்க வேண்டும் என்றால் ஒ.எஃப்.எஸ் முறைபற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.
ஒ.எஃப்.எஸ் (OFS) என்றால் என்ன?
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களின் பங்கு இருப்பை குறைக்க ஒரு புதிய விற்பனை முறை உருவாக்கப்பட்டுள்ளது இதற்கு பெயர் தான் ஒ.எஃப்.எஸ். இந்த முறைப்படி பங்குச்சந்தையில் நிறுவனங்கள் ஒரே நாளில் தனிப்பட்ட விற்பனை முனையின் மூலம் பங்குகளை விற்பனை செய்யப்படும். இது சாதாரண பங்கு வர்த்தகத்திற்கு மாறுப்பட்டவை.
ஒ.எஃப்.எஸ் சில்லறை முதலீட்டாளர்கள்
ஒ.எஃப்.எஸ் வர்த்தகத்தில் 2 இலட்ச ரூபாய் வரை முதலீடு செய்யும் அனைவரும் சில்லறை முதலீட்டாளர்கள் தான்.
என்ன லாபம்??
நிறுவனங்கள் விற்பனை செய்யும் பங்கு அளவில் 20 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களுக்கு தனியாக ஒதுக்கப்படும். மேலும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பங்கு விலையில் 5 சதவீதம் விலை சலுகை கிடைக்கும்.
விலை கூறல்
சில்லறை முதலீட்டாளர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட விலை அல்லது அதற்கு மேல் விலையில் கூற வேண்டும், ஏலமுறைப்படி யார் அதிக விலை குறிப்பிட்டு உள்ளனரோ அவர்களுக்கு பங்குகள் அளிக்கப்படும்.
டீல் முடிந்தது
நீங்கள் குறிப்பிட்ட விலையில் பங்குகள் கிடைத்துவிட்டால், நீங்கள் கோரிய பங்குகள் அனைத்தும் திங்கட்கிழமை உங்கள் கணக்கில் இருக்கும்.