டெல்லி: 2014ஆம் நிதியாண்டில் மலிவு விலை விமான நிறுவனங்கள் அளித்த அதிரடியான சலுகையின் மூலம் இந்தியாவில் விமான பயணிகளின் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்ந்துள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
விமான பயணிகள் அதிகம் கொண்ட நாடுகளாக சீனா, ரஷ்யாவிற்கு அடுத்து இந்தியா உள்ளது. மேலும் உலககளவில் விமான பணிகளின் எண்ணிக்கை 5.9 சதவீதம் உயர்ந்ததாகவும் சர்வதேச விமான போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சீனா
கடந்த நிதியாண்டில் சீனாவில் மட்டும் விமான பயணிகளின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது, இதுவே சர்வதேச விமான பயணிகள் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
ரஷ்யா
இந்நாட்டின் பொருளாதார நிலை சற்று மோசமாக இருந்தாலும். விமான போக்குவர்த்து மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. கடந்த வருடம் விமான பயணிகளின் எண்ணிக்கை 9.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளது.
330கோடி பயணிகள்
2014ஆம் நிதியாண்டில் உலகம் முழுவதும் 330 கோடி பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். 2013ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 170 மில்லியன் அதிகமாகும்.
துபாய்
சில நாட்களுக்கு முன்பு அதிகப்படியான சர்வதேச விமான பயணிகளை கொண்ட விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தை அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் இப்பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டது.