மும்பை: 25,000 பணியாளர்களை நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற திட்டமிட்ட டிசிஎஸ் நிறுவனம் பணியாளர்களின் எதிர்ப்பு மற்றும் அதர்த்தமற்ற காரணங்களுடன் பணியாளர்களை வெளியேற்றுவதை ஊடகங்கள் வெளியிட்டதை அடுத்து இந்நிறுவனம் தனது வெளியேற்ற நடவடிக்கை நிறுத்திக் கொண்டது.
இதனால் இந்நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு எண்ணிக்கை குறையுமா அல்லது ஆட்சேர்ப்பு பணிகள் தற்காலிகமாக முடக்கப்படுமா என பலரும் கேள்வி எழுப்பினர், இக்கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டிசிஎஸ் நிறுவனத்தின் சீஇஓ பதில் அளித்துள்ளார்.
ஆட்சேர்ப்பு
டிசிஎஸ் நிறுவனத்தில் 2016ஆம் நிதியாண்டில் நாட்டில் முக்கிய கல்லூரிகளில் இருந்து 35,000 பிரஷ்ஷர்களை நிறுவனத்தில் சேர்க்கும் திட்டத்தில் எந்தவிதமான மாற்றம் இல்லை என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என்.சந்திரசேகர் தெரிவித்தார்.
35,000 பிரஷ்ஷர்கள்
இந்நிறுவனத்தில் 2016ஆம் நிதியாண்டில் 35,000 பட்டம் பெறப்போகும் மாணவர்களை டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்க்க உள்ளதாக கடந்த அக்டோபர் மாதம் இந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதில் 25,000 பிரஷ்ஷர்களை சேர்க்கும் பணி முடிந்துவிட்டதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
1,000 பணியாளர்கள்
மேலும் இந்நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையில் 1,000 பணியாளர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றியுள்ளது. இந்நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை நிறுத்திவிட்டதாக அறிவித்தாலும், தற்காலிகாகவோ அல்லது மறைமுகமாகவோ இப்பணிகள் தொடர்ந்து நடத்தி வருகிறது என இந்நிறுவன பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாஸ்காம்
2016ஆம் நிதியாண்டில் நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 12-16 சதவீதம் வரை அதிகரிக்கும் என நாஸ்காம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இத்துறையின் வர்த்தகம் 211 பில்லியன் டாலர் வரை எட்டும் என நாஸ்காம் கணக்கிட்டுள்ளது.