டெல்லி: நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி மாத காலகட்டத்தில் நாட்டின் நேரடி வரி வசூல் அளவு 11.38 சதவீதம் அதிகரத்து 5.78லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
2014-15 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூலை ரூ. 7.36லட்சம் கோடி அளவில் உயர்த்துவதை மத்திய அரசு இலக்காக நிர்ணயம் செய்துக்கொண்டது. இது 2013ஆம் நிதியாண்டை விட 16 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடதக்கது.
வரி வசூல்
2014ஆம் நிதிஆண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி மாத காலகட்டத்தில் 5.19 லட்சம் கோடி வரை நேரடி வரி வசூலிக்கப்பட்டதாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.
நிறுவன வரி
இந்த 10 மாத காலத்தில் நாட்டின் நிறுவன வரி வசூல் 11.04 சதவீதம் அதிகரித்து 3.64லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலத்தில் 3.28லட்சம் கோடி ரூபாய் வசூலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் வருமான வரி
தனிநபர் வருமான வரி 11.32 சதவிகிதம் உயர்ந்து ரூ.2.07லட்சம் கோடிகளாக வசூல் ஆகியுள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு ரூ.1.86லட்சம் கோடியாக இருந்தது.
பாதுகாப்பு பரிவர்த்தனை வரி
பங்குச்சந்தையில் பங்குகள் பரிமாற்றத்திற்கு விதிக்கப்படும் பாதுகாப்பு பரிவர்த்தனை வரி (STT) 44.12 சதவிகிதம் அதிகரித்து ரூ.5,556 கோடிகள் வசூலாகி உள்ளது. மேற்கூறிய 10 மாத காலத்தில் பங்கு சந்தையில் நடந்த அதிக அளவிலான செயல்பாடே இந்த உயர்வுக்குக் காரணம்.
முன்கூட்டிய வரி
ஏப்ரல் முதல் ஜனவரி வரை, முன்கூட்டிய வரி வசூல் 13.26 சதவீதம்உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதன் வளர்ச்சி 8.71 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.
சரிவு
வருவாய் மூலத்தில் பிடித்தம் செய்யப்படும் வரி (TDS) 7.79 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இதன் வளர்ச்சி 16.65 சதவீதமாக இருந்தது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.