சென்னை: நாட்டில் வாகன உற்பத்தியில் பல நிறுவனங்கள் உள்ள நிலையில் இருசக்கர வாகனம் முதல் ராணுவ வாகனங்கள் உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனமான மஹிந்திரா நிறுவனம் தமிழ்நாட்டில் வாகனத் உற்பத்தி மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்புக்காக சுமார் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
இப்புதிய தொழிற்சாலையை அமைக்க காஞ்சிபுரத்திற்கு அருகில் செய்யாறு பகுதியில் தமிழக அரசு 225 ஏக்கர் நிலம் அளிப்பதாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
255 ஏக்கர் நிலம்
இதுக்குறித்து இந்நிறுவனத்தின் வாகனப் பிரிவு செயல் இயக்குநர் பவன் கோயங்கா கூறுகையில், செய்யாறில் 255 ஏக்கர் நிலத்தை ஒதுக்க தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை அமைக்கும் பணிகள் விரைவாக எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஒப்பந்தம்
இத்திட்ட தொடர்பான ஒப்பந்தம், வரும் மே மாதம் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்படும் எனவும் தெரிவித்தார்.
முதலீடு
மேலும் இந்த முதலீடு இரண்டு கட்டமாக தமிழ்நாட்டில் முதலீடு செய்யப்படும் என மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் மிகப் பெரிய உற்பத்தி ஆலையாக இது இருக்கும் என நம்பப்படுகிறது.
மஹிந்திரா & மஹிந்திரா
முதல் கட்டமாக வாகனங்களுக்கான பரிசோதனை மையம் அமைக்கப்படும். அடுத்த கட்டமாக, வாகன உற்பத்தி ஆலை அமைக்கப்படும். மஹிந்திராவின் புதிய மாடல்கள் யாவும் செய்யாறு ஆலையில் தயாரிக்கப்படும் என இந்நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
சரக்கு மற்றும் சேவை வரி
மத்திய அரசு பிப்.27 ஆம் தேதி வெளியிட உள்ள பட்ஜெட்டில் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப்படுமா என்ற கேள்விக்கு கோயங்கா, "மத்திய அரசு நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் செய்வதற்கு மிகவும் ஆர்வுடன் உள்ளது இதற்கான அனைத்து விதமான பணிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது" என தெரிவித்தார்.