டெல்லி: 2014ஆம் நிதியாண்டின் டிசம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு 2.16 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, 2013ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இதன் அளவு தற்போது இரட்டிப்பாகியுள்ளது. 2013ஆம் நிதியாண்டில் இக்காலகட்டத்தில் அன்னிய முதலீட்டின் அளவு 1.10 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடதக்கது.
27 சதவீத உயர்வு
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் அன்னிய முதலீட்டின் அளவு கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகரித்து 21.04 பில்லியன் டாலராக இருக்கிறது. கடந்த நிதியாண்டின் அன்னிய முதலீட்டின் அளவு 16.56 பில்லியன் டாலராக இருந்தது என தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை தெரிவித்தது.
டெலிகாம்
இந்தியாவில் அன்னிய முதலீடு அதிகம் பெற்ற துறைகளில் டெலிகாம் துறையில் நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில் 2.67 பில்லியன் டாலர் முதலீடு பெற்றுள்ளது.
பிற துறைகள்
டெலிகாம் நிறுவனத்தை தொடர்ந்து அதிகப்படியான அன்னிய முதலீட்டை பெற்ற துறைகளில் இரண்டாம் இடம் பெறுவது சேவை துறை (2.29 பில்லியன் டாலர்), அட்டோமொபைல் ( 1.58 பில்லியன் டாலர்), பார்மா ( 1.21 பில்லியன் டாலர்) மற்றும் கம்பியூட்டர் மென்பொருள் மற்றும் வன்பொருள் ($ 971 மில்லியன்).
மொரிஷியஸ்
மேலும் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யப்பட்ட நாடுகளில் மொரிஷியஸ் முதல் இடத்தில் உள்ளது. இதன் படி மொரிஷியஸ் இந்தியாவில் 5.89 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இதனை தொடர்ந்து சிங்கப்பூர் 4.31 பில்லியன் டாலர், நெதர்லேண்டு 2.57 பில்லியன் டாலர், அமெரிக்கா 1.48 பில்லியன் டாலர் மற்றும் ஜப்பான் 1.42 பில்லியன் டாலர் அளவு முதலீடாக பெற்றுள்ளது.
அன்னிய முதலீட்டின் தேவை
மேலும் நாட்டின் வளரச்சிக்கு அடுத்த 5 வருடத்தில் கட்டுமானத்துறை, துறைமுகம், விமான நிலையம் மற்றும் நெடுஞ்சாலை ஆகியவற்றை மேம்படுத்த 1 டிரில்லியன் டாலர் முதலீடு தேவைப்படுகிறது.
முக்கிய துறைகள்
மத்திய அரசு காப்பீடு, ரயில்வே மற்றும் மருத்துவ வசதிகள் ஆகிய துறைகளில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.