டெல்லி: இந்தியாவின் மலிவு விலை விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான பயணிகளை கவர ஒரு லட்சம் விமான டிக்கெட்களை சலுகை விலையில் விற்க திட்டமிட்டுள்ளது.
இதன் படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உள்நாட்டு பயணத்திற்கு 1,699 ரூபாயும், வெளிநாட்டு பயணத்திற்கு 3,799 ரூபாய் என்ற சலுகை கட்டணத்தில் அறிவித்துள்ளது.
கலர் தி ஸ்கை
மேலும் இந்த சலுகையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் "கலர் தி ஸ்கை" என்ற பெயரில் வெளியிடுகிறது. இக்கட்டண சலுகை வருகிற பிப்ரவரி 26ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது எனவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயண நாள்
இச்சலுகையில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களது பயண நாள் மார்ச் 1 முதல் ஏப்ரல் 20 வரையில் இருக்க வேண்டும்.
ஹோலி
மேலும் இச்சலுகை ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சுமார் 1 இலட்சம் டிக்கெட்களை விற்க உள்ளது. குறைவான கட்டத்தை அளிப்பதால் புதிய வாடிக்கையாளர் எண்ணிக்கையும், பழைய வாடிக்கையாளரின் பயண எண்ணிக்கையும் உயரும் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரியான கனிஷ்வரன் அவிலி தெரிவித்தார்.
1,699 ரூபாய் கட்டணம்
இந்நிறுவனத்தின் ஹைதெராபாத்-விஜயவாடா, டெல்லி-டேராடூன், கவுகாத்தி-கொல்கத்தா, அகமதாபாத்-மும்பை, பெங்களூரு-ஹைதெராபாத் ஆகிய வழித்தடங்களில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெறும் 1,699 ரூபாய் மட்டுமே பயண கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
3,799 ரூபாய் கட்டணம்
இந்நிறுவனத்தின் வெளிநாட்டு விமான சேவையில் டெல்லி- கட்மாண்டு வழித்தடத்தில் 3,799 ரூபாய் என்ற சலுகை கட்டணத்தை அறிவித்துள்ளது.
பங்கு பரிமாற்றம்
கடந்த வாரத்தில் கலாநிதி மாறன் மற்றும் கேஏஎல் ஏர்வேஸ் நிறுவன கட்டுப்பாட்டில் இருந்த 56.4 சதவீத ஸ்பைஸ்ஜெட் நிறுவன பங்குகள் தற்போதைய நிறுவனரான அஜய் சிங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
பங்குச்சந்தையில் ஸ்பைஸ்ஜெட்
புதன்கிழமை வர்த்தகத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவன பங்குகள் 4.35 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 25.25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.