டெல்லி: இந்தியாவின் மக்கள் தொகையும், பயணிகள் எண்ணிக்கையும் பன்னாட்டு விமான போக்குவரத்து நிறுவனங்களை ஈர்த்த வண்ணம் உள்ளன.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் டாடா குழுமத்தின் கூட்டு முயற்சியான விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம், நாட்டின் பயணிகள் நெருக்கடி அதிகம் உள்ள விமான நிலையங்களைக் குறிவைத்து தன் சேவைகளை விரிவாக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
குவஹாத்தி மற்றும் பாக்டோக்ரா
இதன்படி வடகிழக்கு மாநில நகரங்களான குவஹாத்தி மற்றும் பாக்டோக்ரா ஆகிய பகுதிகளுக்கு சேவைகளைத் துவங்க திட்டமிட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
தினசரி சேவை
ஏப்ரல் 2ஆம் தேதி முதல் டெல்லியிலிருந்து குவஹாத்தி மற்றும் பாக்டோரா ஆகியவற்றை இணைக்கும் தினசரி சேவைகளைத் துவங்கவுள்ளதாக விஸ்தாரா அறிவித்துள்ளது.
சுற்றுலா ஊக்குவிப்பு
கவுஹாத்தியில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த விமானம் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலாவினை ஊக்குவிக்கும் மையமாகவும், வாயிலாகவும் திகழும் பாக்டோக்ராவிற்கு தன் பயணத்தைத் தொடரும்.
புதிய திட்டம்
"எங்களுடைய சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டம், இந்தப் பகுதிகளில் இணைப்பினை ஏற்படுத்தும் எங்கள் நோக்கத்தினை உறுதி செய்கிறது. குவாஹாத்திக்கும் பாக்டோக்ராவிற்கும் சேவையை விரிவு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என அந்நிறுவனத் தலைவர் Phee Teik Yeoh தெரிவித்தார்.
ஹைதராபாத்
இந்த நிறுவனம் அண்மையில் தலைநகரிலிருந்து தென்னிந்திய நகரமான ஹைதராபாத்திற்கு சேவைகளைத் தொடங்கி சிறிது காலத்திற்குள் இந்த அறிவிப்பு வந்திருப்பது குறிப்பிட்த்தக்கது.
ஜனவரி 9
விஸ்தாரா, தன்னுடைய சேவைகளை ஜனவரி 9 ஆம் தேதி முதல் துவங்கி மும்பை மற்றும் அஹமதாபாத் ஆகிய நகரங்களுக்கு தன்னுடைய மையமான டெல்லியிலிருந்து சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
ஏர்பஸ் ஏ320 ரக விமானங்கள்
இந்த நிறுவனம் தற்போது ஐந்து ஏர்பஸ் ஏ320 ரக விமானங்களை தன் வசம் வைத்துள்ளதுடன் வரும் ஏப்ரல் மாதம் மேலும் ஒரு விமானத்தை வாங்கவுள்ளது.
3வது விமான நிறுவனம்
இந்த முழுச் சேவை விமான நிறுவனமான விஸ்தாரா, அரசின் ஏர் இந்தியா மற்றும் தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் ஆகியவற்றிற்கு அடுத்ததாக டெல்லி, மும்பை, அஹமதாபாத், கோவா மற்றும் ஹைதராபாத் ஆகிய அதிக பணிகள் கொண்ட ஐந்து உள்நாட்டு விமான நிலையங்களுக்கு விமான போக்குவரத்து சேவைகளை கொண்டுள்ளது.