டெல்லி: மத்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் ஏற்கனவே தன்னுடைய ஜூரிச், சிட்டகாங் மற்றும் வியன்னா நகர கிளைகளை மூடியதுடன் தற்போது கெய்ரோ மற்றும் டெஹ்ரானில் உள்ள அலுவலகங்களை மூட முடிவு செய்துள்ளது.
இதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் பிரத்தியேக குழு கெய்ரோ மற்றும் டெஹ்ரானில் உள்ள கிளைகளை மூடத் தேவையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்திற்கான இணை அமைச்சர் மகேஷ் சர்மா மாநிலங்களவையில் தெரிவித்தார்.
மகேஷ் சர்மா
"கடந்த 2013-14 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா கெய்ரோ கிளையின் மூலமாக 58.56 லட்ச ரூபாயும், டெஹ்ரான் கிளை மூலமாக 138.75 லட்சம் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது" என திரு சர்மா எழுத்து பூர்வமான பதிலில் தெரிவித்துள்ளார்.
டொரான்டோ
இதனிடையே, ஏர் இந்தியா நிறுவனத்தின் டொரான்டோ நிலையத்தின் அளவினை குறைக்கும் பணிகளில் உள்ள சிக்கல்களை ஆராயும் வேலையில் ஒரு குழு ஈடுபட்டுள்ளதாகவும் அப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருமானம்
ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 67.11 கோடி ரூபாய் வருவாயை டொரான்டோ கிளை மூலமாக கடந்த 2013-14 ஆம் ஆண்டில் ஈட்டியது.
சிட்டகாங், வியன்னா
கடந்த நவம்பர் மாதத்தில் சிட்டகாங் மற்றும் வியன்னா நகரங்களிலுள்ள தனது பயணச்சீட்டு பதிவு அலுவலகங்களை மூடியதுடன் ஜூரிச்சில் உள்ள அலுவலகத்தையும் கடந்த அக்டோபர் மாதம் ஏர் இந்தியா மூடியது.
வெளிநாட்டு நகரங்கள்
2013-14 ஆம் ஆண்டில், விமானங்கள் இயக்கப்படாத சுமார் 9 வெளிநாட்டு நகரங்களில் தனது அலுவலகங்களைக் கொண்டிருந்தது. இவற்றில், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலிஸ், டொரான்டோ, ஆம்ஸ்டர்டாம், கெய்ரோ, டெஹ்ரான், ஜூரிச், வியன்னா மற்றும் சிட்டகாங்க் ஆகிய நகரங்கள் அடங்கும்.
3 அலுவலகங்கள்
இனி வரும் காலங்களில் இந்த நிறுவனம் வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் ஆகிய நகரங்களில் உள்ள அலுவலகங்களை மட்டும் கொண்டு இயங்கும்.