டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டின் பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீட்டு அளவை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதம் வரை உயர்த்தியும், அன்னிய நிறுவனங்களிடம் இருந்து முதலீட்டை பெற திணறி வருகிறது.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்த தகவல் படி கடந்த செவ்வாய்க்கிழமை வரையில் வெறும் 6 அன்னிய முதலீட்டுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு வெறும் 96 கோடி ரூபாய் (15.3 மில்லியன் டாலர்).
மேலும் இந்த 6 விண்ணப்பங்களில் வெறும் 2 நிறுவனங்கள் மட்டுமே 49 சதவீத அன்னிய முதலீட்டின் கீழ் விருப்பம் தெரிவித்துள்ளது.
ஆயுத இறக்குமதி
இதனால் ஆயுத இறக்குமதிக்காக இந்தியா அடுத்த பத்து வருடத்தில் இரட்டிப்பு பணத்தை (120 பில்லியன் டாலர்) செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. கடந்த பத்து வருடத்தில் ஆயுத இறக்குமதிக்காக அரசு சுமார் 60 பில்லியன் டாலர் அளவு பணத்தை செலவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.
மேக் இன் இந்தியா
இந்தியாவை பாதுகாப்பு துறை சார்ந்த உபகரணங்களை உற்பத்தி செய்யும் தளமாக மாற்றும் நோக்கத்துடனே மோடி அரசு இத்துறையில் அன்னிய முதலீட்டு அளவை அதிகரித்தது. மேலும் மோடியின் கனவு திட்டமான மேக் இன் இந்தியா திட்டத்தில் பாதுகாப்பு துறை சார்ந்த உற்பத்தி மிக முக்கிய பங்கு வகுக்கிறது.
65% ஆயுத இறக்குமதி
இந்தியா 65 சதவீத ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்கிறது. இதனால் 2013ஆம் ஆண்டில் ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலீடத்தை பெற்றிருந்தது. 2014ஆம் ஆண்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்தது சவுதி அரேபியா.
மத்திய அரசு
பாதுகாப்புத் துறையில் உயர்த்தப்பட்ட 49 சதவீத அன்னிய முதலீட்டு அளவின் தாக்கம் மிதமான வேகத்தில் தெரியும் என்றும், இக்குறைந்த காலகட்டத்தில் இதன் தாக்கத்தை கணக்கிடுவது முறையற்றது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வர்த்தகம்
மேலும் இந்தியா 65 சதவீத ஆயுதங்களை பிற நாடுகளில் இருந்து பெற்று வரும் நிலையில் இந்த வர்த்தகத்தைக் குறைக்கும் வகையில் ஏன் பிற நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பெரும் பொருட் செலவுடன் உற்பத்தி தளத்தை அமைக்க வேண்டும் எனவும் யோசிக்க துவங்கியுள்ளது.
உயர்தர தொழில்நுட்பம்
இத்துறையில் அன்னிய முதலீட்டை கவர வெறும் 49 சதவீத முதலீடு அளவு மட்டும் போதாது. நிறுவனங்கள் பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தும் ரகசியமான மற்றும் உயர்தர தொழில்நுட்பத்தை பிற நாடுகளுக்கு கொண்டு வர தயக்கம் காட்டி வருகிறது. இத்தகைய பிரச்சனைகளை களைய தனிக் குழு ஒன்றை அமைக்கப்படும் எனவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது.