பெங்களுரூ: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமாக திகழும் விப்ரோ நிறுவனம், டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அபித் அலி-யை தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.
அபித் அலியின் பணி வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என விப்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
விப்ரோ
அபித் அலி இனி விப்ரோ நிறுவனத்தில் குளோபல் இன்ஃப்ராஸ்டக்சர் சர்வீசஸ், பிஸ்னஸ் அப்ளிகேஷன் சர்வீசஸ், பிஸ்னஸ் பிராசஸ் சர்வீசஸ் மற்றும் டெக்னாலஜி சொல்யுஷன்ஸ் ஆகிய பிரிவுகளை கவனிக்கப் போகிறார்.அத்துடன் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்காவின் வர்த்தகத்தையும் கண்காணிக்கப் போவதாக விப்ரோ நிர்வாகத்தின் செய்தி குறிப்பு கூறுகிறது.
டி.கே குரியன்
அபித் அலியின் நியமனத்தைக் குறித்து விப்ரோ நிறுவனத்தின் சீஇஓ டி.கே.குரியன் கூறுகையில், "அபித் அலியின் அனுபவம் மற்றும் சாதனைகள் விப்ரோ நிறுவனத்தின் ஐடி மற்றும் பிபிஎஸ் சேவகளை புதிய உச்சத்திற்கு கொண்டு சேர்க்கும். இவரது நியமனம் எங்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கிறது" என்றார்.
அபித் அலி நீமுச்வாலா
இதுக்குறித்து அபித் அலி கூறுகையில், "தொழில்நுட்பத்தின் சிறந்து விளங்கும் விப்ரோ நிறுவனத்தில் இணைந்ததில் பெருமிதம் கொள்கிறேன்," என்றார்.
டிசிஎஸ் நிறுவனத்தில் அபித் அலி
டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 23 ஆண்டுகள் பணியாற்றிய அபித் அலி, கடந்த பிப்ரவரி மாதம் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். 2009ஆம் ஆண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் பிபிஓ பிரிவின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார்.
வருவாய் உயர்வு
அபித் அலியின் நியமனத்திற்கு பின் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில், பிபிஒ பிரிவின் வருவாய் அளவு 6.9 சதவீதத்தில் (2009ஆம் நிதியாண்டு) இருந்து 12 சதவீதமாக (2014ஆம் நிதியாண்டு) உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.