கொல்கத்தா: ஊரக வங்கிகளில் பணியார்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மோடி தலைமையிலான அரசு ஊரக வங்கிகளின் வருவாயை அதிகரிக்க பணியாட்களின் எண்ணிக்கையை குறைக்க வங்கி நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் ஐடி பராமரிப்பு, ஏடிஎம் இயந்திரங்களில் பணம் செலுத்துதல் மற்றும் பாதுகாப்பு போன்ற பணிகளுக்கு தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த முறையில் சேவை பெறவும் வலியுறுத்தியுள்ளது.
80,000 பணியாளர்கள்
தற்போது இந்தியாவில் ஊரக வங்கி கிளைகளில் சுமார் 80,000 பணியாளர்கள் பணியாற்றி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பணியாளர்கள் எண்ணிக்கை குறைப்பு என்றால் ஆட்குறைப்பு செய்ய வேண்டும் நிர்பந்தம் இல்லை. வங்கிகள் அடுத்து வரும் நிதியாண்டுகளில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை 10-12 சதவீதம் வரை குறைத்தால் போதுமானது என மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
வர்த்தக விரிவாக்கம்
மத்திய அரசு, ஊரக வங்கிகளில் ஐடித்துறை சேவைகளின் உதவியைப் பெற்று குறைவான பணியாளர்களைக் கொண்டு அதிக வர்த்தகத்தை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
எஸ்.கே மித்ரா கமிட்டி
இதன் மூலம் ஊரக வங்கிகளை லாபகரமானதாகவும் மாற்ற முடியும் என ஊரக வங்கி மேம்பாட்டில் மனிதவள பிரிவில் எஸ்.கே மித்ரா கமிட்டி தெரிவித்திருந்தது.
4.50 இலட்சம் கோடி வர்த்தகம்
இந்தியாவில் 56 ஊரக வங்கிகளுக்கு 19,400 வங்கிக் கிளைகள் உள்ளன, இவற்றில் மொத்தம் 80,000 பணியாளர்கள் பணியாற்றுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இவ்வங்கிகளின் மொத்த வர்த்தகத்தின் மதிப்பு 4.50 லட்சம் கோடியாகும். மேலும் இவ்வங்கிகளின் முக்கிய வாடிக்கையாளர்களாக விவசாயிகள் உள்ளனர்.