பெங்களுரூ: இந்தியாவில் 4ஜி மொபைல் விற்பனையில், உலகின் முன்னணி நிறுவனங்களாக திகழும் சாம்சாங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை ஓரங்கட்டியுள்ளது சீனாவின் ஜியோமி.
சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி, மொபைல் விற்பனையில் முன்னணி நிறுவனங்களுக்கு கடுமையான போட்டி அளித்தும் வருகிறது.
குறிப்பாக சீனாவில் சாம்சாங் நிறுவனத்தின் மொபைல் விற்பனை 60 சதவீதம் அளவு குறைந்ததற்கு முக்கிய காரணம் ஜியோமி நிறுவனம் தான்.
ஜியோமி நிறுவனம்
ஜனவரி மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஒட்டுமொத்த 4ஜி மொபைல்களில் ஜியோமி நிறுவனம் 30.8 சதவீத சந்தையைப் பிடித்துள்ளதாக சைபர்மீடியா ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம்
கடந்த 2014ஆம் நிதியாண்டில் அக்டோபர் - டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 45 சதவீத சந்தை மதிப்புடன் ஆப்பிள் நிறுவனம் முதல் இடத்தில் இருந்தது. ஜனவரி மாதத்தில் நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.
சைபர்மீடியா ரிசர்ச்
இந்நிறுவனம் அளித்த தகவலின் படி, ஜனவரி மாத மொபைல் விற்பனையில் ஜியோமி 30.8 சதவீத சந்தை மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து ஆப்பிள் (23.8%), சாம்சங் (12.1%), ஹெச்டிசி (10%), மைக்ரோமேக்ஸ் (8.3%) நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
இந்திய சந்தை
தொலைதொடர்புத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியச் சந்தையைக் கைபற்ற பல நிறுவனங்கள், இந்தியாவில் தனது நிறுவன கிளைகளை விரிவாக்கம் செய்து வருகிறது. மேலும் பல நிறுவனங்கள் தொலைதொடர்பு மற்றும் இன்டர்நெட் நிறுவனங்களில் முதலீடு செய்யும் காத்துள்ளன.
சாப்ட்பாங்க் கார்ப்
இந்திய இண்டர்நெட் மற்றும் தொலைதொடர்பு துறையின் மீது அதிகளவிலான நம்பிக்கை வைத்திருக்கும் ஜாப்பான் நாட்டின் சாப்ட்பாங்க் கார்ப் நிறுவனம் ஏர்டெல், ஸ்னாப்டீல், பிளிப்கார்ட் போன்ற பல நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறது.