சென்னை: தமிழ்நாட்டில் உற்பத்தி துறையை ஊக்கப்படுத்த மாநில அரசு ரூ.650 கோடி மதிப்பிலான வணிக வரியை தள்ளுபடி செய்துள்ளது.
2015-16ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் அறிக்கையை தமிழ்நாடு முதல் அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
வரி வருமானம்
மாநிலத்தின் வரி வருமானம் மிதமான கேவத்தில் வளர்ந்து வந்தாலும், மானியம் மற்றும் சமுக நலன் திட்டங்களுக்காக அதிகளவில் நிதி ஒதுக்கியதன் மூலம் நிதி நெருக்கடியை சந்தித்தாலும் தமிழக அரசு உற்பத்தி துறையை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார்.
2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வரி உயர்வு எதுமில்லை என்பது குறிப்பிடதக்கது.
மின்சார வரி தள்ளுபடி
சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு கழிவு பொருட்களை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளுக்கு மின்சார வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இச்சலுகை கரும்புச் சக்கைகளை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு கிடையாது என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தொழிற்துறை போட்டித் தன்மை
பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடின் போட்டித் தன்மையை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாட்டு மதிப்பு கூட்டு வரி 2006 சட்டத்தின் படி தொழில் துறையின் மீது விதிக்கப்பட்ட 3 சதவீத உள்ளீடு வரி கடனை வாபஸ் பெற்றுள்ளது தமிழக அரசு.
மதிப்பு கூட்டு வரி
எல்இடி விளக்குகள், மொபைல், ஏர் கம்பரசர் மற்றும் 10ஹெச்பி-க்கும் குறைவான சக்தி கொண்ட பம்பு செட் மற்றும் அதன் உதிரி பாகங்களுக்கு விதிக்கப்பட்ட 14.5% மதிப்பு கூட்டு வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மீன்பிடித் தொழில்
தமிழ்நாட்டில் மீன்பிடித் தொழிலை மேம்படுத்த கயிறு, மிதவைகள், விளக்குகள் போன்றவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.