டெல்லி: 2016ஆம் ஆண்டிற்குள் சுமார் 1,000 புதிய எஃப் எம் ரேடியோ சேனல்களை ஏலம் விட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்தியாவில் தொலைக்காட்சி மற்றும் இதர ஊடக துறைகள் வேகமாக வளர்ந்த நிலையில், ஒலி ஊடகம் (ரேடியோ) துவண்டுபோனது. இதனை கவனித்த பிரதமர் மோடி இத்துறையை மீண்டும் புத்துணர்வு அளித்து மீட்டு எடுக்க திட்டமிட்டுள்ளார்.
1000 எஃப் எம் சேனல்களை ஏலம் விடும் பணிகள் ஏற்கனவே துவங்கிய நிலையில், மூன்றாவது கட்டமாக 69 நகரங்களில் 132 ரேடியோ சேனல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ஜே எஸ் மாத்தூர் தெரிவித்தார்.
இந்திய வணிகச் சேவைகளின் கூட்டமைப்பான எப் சி சி ஐ-யின் வருடாந்திர மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் இதை அவர் தெரிவித்தார்.
ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையைப் பற்றி அவர் இந்நிகழ்ச்சியில் குறிப்பிடுகையில், "இந்தத் துறை தற்போது சுறுசுறுப்புடன் இயங்கி வருவதுடன், பல்வேறு தொழில்நுட்ப சவால்களையும் புதிய அடித்தளங்களையையும் எதிர் நோக்கியுள்ளது" என்றும் தெரிவித்தார்.
அனிமேஷன் மற்றும் அது தொடர்பான விளையாட்டுத் துறையிலும் அதிக அளவு வாய்ப்புக்கள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கேபிள் டிவி ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்குதல் பற்றி கருத்து தெரிவிக்கையில், இத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு இது முதல் படி எனக் குறிப்பிட்டார்.