பெங்களுரூ: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி சுரேஷ் சேனாபதி, இந்நிறுவனத்தில் 35 வருட பணியாற்றிய பின் நிறுவனம் மற்றும் நிறுவன பொறுப்பபுகளில் இருந்து ஒய்வுபெறுகிறார்.
விப்ரோ
35 வருடங்களுக்கு முன்பு வெறும் எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாக திகழ்ந்த விப்ரோ, தற்போது பல துறைகளில் செயல்படும் சர்வதேச நிறுவனமாக உருவெடுத்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் இந்த பரிமாற்ற வளர்ச்சியில் சேனாபதிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
ரூ.43 கோடியில் முதல் ரூ.50,000 கோடி வரை
விப்ரோ நிறுவனம் துவங்கி 70 வருடங்கள் ஆன நிலையில், 1980ஆம் ஆண்டு சேனாபதி நிறுவனத்தில் நிதியியல் துறையின் தலைவராக இணைந்த போது இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை அளவு 45 கோடி மட்டுமே. இன்று இதன் அளவு 50,000 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.
சுரேஷ் சேனாபதி
இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியாக மட்டும் அல்லாமல் விப்ரோ எண்டர்பிரைஸ் லிமிடெட் மற்றும் விப்ரோ ஜிஈ ஹெல்த்கேர் நிறுவனங்களின் அதிகாரமற்ற நிர்வாக இயக்குனராகவும் உள்ளார்.
35 வருடம்
விப்ரோ நிறுவனத்தின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றிய சுரேஷ் சேனாபதி 35 வருடம் பணியின் பின் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை ஏற்ற விப்ரோ நிர்வாகம் அவரின் ஒய்வு அறிவிப்பை ஏற்றுக்கொண்டது.
நியூயார்க் பங்குச் சந்தை
விப்ரோ நிறுவனம் நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடும் பணியில் சுரேஷ் சேனாபதி அதி முக்கிய நபராக இருந்தார் என விப்ரோ நிறுவனத்தின் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்து என்ன திட்டம்
இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறும் சேனாபதியிடம் த ஹிந்து பத்திரிக்கையாளர் ஒருவர், அடுத்து என்ன திட்டம்? புதிய நிறுவனத்தை துவங்குவதா அல்லாது துவக்க நிறுவனங்களில் முதலீடு செய்வதா என்று கேட்டார்.
இதுவரை எந்த விதமான திட்டமும் இல்லை, ஆனால் வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வேன் என்று சேனாபதி பதில் அளித்தார்.